324. மாண்டார் சுடலைப் பொடிபூ
சிமயானத்
தீண்டா நடமா டியவேந் தல்தன்மேனி
நீண்டா னிருவர்க் கெரியா யரவாரம்
பூண்டா னகர்பூம் புகலிந் நகர்தானே. 9
325. உடையார் துகில்போர்த் துழல்வார்
சமண்கையர்
அடையா தனசொல் லுவரா தர்களோத்தைக்
கிடையா தவன்றன் னகர்நன் மலிபூகம்
புடையார் தருபூம் புகலிந் நகர்தானே. 10
__________________________________________________
9. பொ-ரை: இறந்தவர்களை எரிக்கும்
சுடலையில் விளையும் சாம்பலை உடலிற் பூசிக் கொண்டு,
அம்மயானத்திலேயே தங்கி நடனமாடும் தலைவரும், திருமால்
பிரமர் பொருட்டுத் தம் திருமேனியை அழலுருவாக்கி
ஓங்கி நின்றவரும் பாம்பை மாலையாகத் தரித்தவருமான
சிவபிரானது நகர் அழகிய புகலிப் பதியாகும்.
கு-ரை: சுடலைப் பொடி பூசி, மயானத்தாடி,
மாலயனுக்காக அக்கினி மலையாய் நீண்டு, அரவை யாரமாகப்
பூண்டு விளங்கும் இறைவன் பதி புகலி என்கின்றது. மாண்டார்
- இறந்தவர். பொடிபூசி மயானத்தாடி என்றது எல்லாரும்
அந்தம் எய்த, தாம் அந்தம் இல்லாதிருப்பவன் என்பதை
விளக்கியது. ஏந்தல் - தலைவன். தன்மேனி இருவர்க்கு
எரியா நீண்டான் எனக் கூட்டுக. அரவு ஆரம் பூண்டான்
- பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவன்.
10. பொ-ரை: கீழ் உடையோடு மெல்லிய
ஆடையைப் போர்த்துத் திரியும் புத்தரும், சமணர்களும்
ஆகிய கீழ்மக்கள் பொருந்தாதவற்றைக் கூறுவார்கள்.
அக்கீழோரின் ஓத்திற்கு அகப்படாதவன் சிவபிரான்.
அப்பெருமானது நன்னகர், நன்கு செறிந்த பாக்கு மரச்சோலைகள்
சூழ்ந்த புகலிநகராகும்.
கு-ரை: புறச்சமயிகளாகிய சமணர்
புத்தர் வேதங்கட்குக் கிடையாத சிவனார்பதி புகலி
என்கின்றது. உடையார் துகில் - உடுக்கத்தக்க
துகில். போர்த்து - போர்வையாகப் போர்த்து. கையர்
- கீழ்மக்கள். அடையாதன சொல்லுவர் - பொருந்தாதவற்றைச்
சொல்லுவார்கள். ஆதர்கள் - கீழ்மக்கள். ஓத்து - வேதத்தை;
என்றது பிடகம் முதலியவற்றிற்கு. வேற்றுமை மயக்கம்.
கிடையாதவன் - அகப்படாதவன். பூகம் - பாக்குமரம்.
|