பக்கம் எண் :

538திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


391. துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணையந் தணையாறே. 10

392. கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலமார் தருஞா னசம்பந்தன்
அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
சொலுமா லைவல்லார் துயர்வீடே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

10. பொ-ரை: துவராடை தரித்த புத்தர், ஆடையின்றித் தோலைக் காட்டும் சமணர் ஆகியவரின் மாறுபட்ட வாய்மொழிகளை விரும்பாது, தவத்தால் மேம்பட்டவர்கள், பிரமன் முதலிய தேவர்களோடு வந்தணைந்து வழிபடும் தலம் திருவையாறாகும். அதனைச் சென்று வழிபடுமின்.

கு-ரை: கவர்வு - கபடம். தவராசர்கள் - தவத்தான் மிக்கமுனிவர்கள். தாமரையான் என்றது பிரமனை.

11. பொ-ரை: கலைவல்லவர்களின் ஆரவாரம் மிக்க சீகாழிப் பதியில் உள்ளார்க்குத் தலைவனாகிய நன்மை அமைந்த ஞானசம் பந்தன் அலைளை உடைய காவிரியால் சூழப்பட்ட திருவையாற்றைப் போற்றிப் பாடிய இத்தமிழ் வல்லவர்களின் துயர்கள் நீங்கும்.

கு-ரை: இது ஐயாற்றைப்பற்றிய இம்மாலையைச் சொல்ல வல்லார் துன்பத்தினின்று வீடுபெறுவர் என்கின்றது.

கலை - கலை ஞானங்கள். கலி - ஒலி.