37. திருப்பனையூர்
பதிக வரலாறு:
திருவாரூரை வணங்கிவருகின்ற திருஞானசம்பந்தப்
பெருமான், யானையையுரித்துப் போர்த்த பெருமான் எழுந்தருளிய
திருப்பனையூரை வணங்கி, ‘அரவச் சடை’
என்னும் வேதப்பொருள் நிறைந்த இசைப்பதிகமாகிய
இதனை அருளிச் செய்தார்கள்.
பண்: தக்கராகம்
பதிக எண்: 37
திருச்சிற்றம்பலம்
393. அரவச் சடைமேன் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே. 1
394. எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்
கண்ணின் றெழுசோ லையில்வண்டு
பண்ணின் றொலிசெய் பனையூரே. 2
__________________________________________________
1. பொ-ரை: சடைமுடிமேல் அரவம், மதி,
ஊமத்தம் மலர் ஆகியன கலந்து விளங்குமாறு அணிந்த
சிவபெருமானது தலம் தொண்டர்கள் பலரும் கலந்து நாள்தோறும்
வணங்கி மகிழ்வுறும் திருப்பனையூராகும்.
கு-ரை: இது, சடைமேல் மதியும் ஊமத்தமும்
கலந்து விளங்குகின்ற இறைவனூர் பனையூர் என்கின்றது.
மத்தம் - ஊமத்தம். நிரவி - கலந்து. பரவி - வணங்கி.
2. பொ-ரை: மனம் ஒன்றி நினைந்த
அடியார்களின் உள்ளத்துள்ளே இருந்து அவர்தம் வழிபாட்டை
ஏற்று மகிழ்கின்ற சிவபெருமானது தலம், தேன்
பொருந்திய மலர்களோடு உயர்ந்துள்ள சோலைகளில்
வண்டுகள் பண்ணொன்றிய ஒலி செய்யும் பனையூராகும்.
|