395. அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறையொன் றுடையானூர்
சிலரென் றுமிருந் தடிபேணப்
பலரும் பரவும் பனையூரே. 3
396. இடியார் கடனஞ் சமுதுண்டு
பொடியா டியமே னியினானூர்
அடியார் தொழமன் னவரேத்தப்
படியார் பணியும் பனையூரே. 4
__________________________________________________
கு-ரை: மனம் ஒன்றி நினைக்கும் அடியார்களிடத்து
உள்நின்று மகிழும் இறைவனூர் பனையூர் என்கின்றது.
எண் -எண்ணம். ஒன்றி - விஷய சுகங்களில் சென்று பற்றாது
திருவடியிலேயே பொருந்தி. மகிழ்ந்தவன் - தான்மகிழ,
தன்னைச்சார்ந்த ஆன்மாவும் மகிழுமாதலின் மகிழ்வித்தவன்
என்னாது மகிழ்ந்தவன் என்றார்; மகிழ்தற்குரிய
சுதந்திரமும் ஆன்மாவுக்கு இல்லை என்றபடி. கள் நின்று
- தேன் பொருந்தி.
3. பொ-ரை: விளங்கும் எரிபோலச்
சிவந்த சடைமுடிமீது வளரும் பிறையொன்றை உடைய
சிவபெருமானது ஊர், அடியவர்களில் சிலர் என்றும்
இருந்து திருவடிகளைப் பரவிப் பூசனை செய்து
போற்றவும், பலர் பலகாலும் வந்து பரவ விளங்கும் திருப்பனையூராகும்.
கு-ரை: பிறையணிந்த பெருமானூர்
பனையூர் என்கின்றது. எறி - அர்ச்சிக்கப்படுகின்ற.
மலரும் பிறை - வளரும் பிறை. சிலர் - அணுக்கத்தொண்டர்களாகிய
அடியார்கள். பலர் - வழிபடும் அடியார்கள்.
4. பொ-ரை: கரைகளை மோதுதல் செய்யும்
கடலிடைத் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டு, மேனி
மீது திருநீற்றுப் பொடியை நிரம்பப் பூசிய
சிவபெருமானது ஊர், அடியவர்கள் தொழ, மன்னவர்கள்
ஏத்த உலகில் வாழும் பிற மக்கள் பணியும் திருப்பனையூராகும்.
கு-ரை: இது, நீறுபூசிய இறைவனூர்
பனையூர் என்கின்றது.
|