பக்கம் எண் :

560திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


427. அரைகெழுகோவண வாடையின்மேலோர்

ஆடரவம்மசைத் தையம்

புரைகெழுவெண்டலை யேந்திப்

போர்விடை யேறிப்புகழ

வரைகெழுமங்கைய தாகமொர்பாக

மாயவன்வாழ்கொளி புத்தூர்

விரைகமழ் மாமலர்தூவி

விரிசடையானடி சேர்வோம். 2

428. பூணெடுநாக மசைத்தனலாடிப்

புன்றலையங்கையி லேந்தி

ஊணிடுபிச்சையூ ரையம்

முண்டியென்று பலகூறி

__________________________________________________

2. பொ-ரை: இடையில் கட்டிய கோவண ஆடையின்மேல் ஆடும் அரவம் ஒன்றைக் கட்டிக் கொண்டு, துளை பொருந்திய வெண்தலையோட்டைக் கையில், ஏந்திப் பலியேற்று, சினம் பொருந்திய விடை மீது ஏறிப் பலரும் புகழ, இமவான் மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனாகிய சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று, மணம் கமழும் சிறந்த மலர்களைத் தூவி அவ்விரிசடையான் திருவடிகளைச் சேர்வோம்.

கு-ரை: பிரமகபாலத்தில் பிச்சை ஏற்ற பெருமானை மலர் தூவித்தியானிப்போம் என்கின்றது. புரை - ஓட்டை. மங்கையது ஆகம் - உமையின் திருமேனி.

3. பொ-ரை: நெடிய பாம்பை அணிகலனாகப் பூண்டு. அனலைக் கையின்கண் ஏந்தி, ஆடிக்கொண்டும், பிரமனது தலையோட்டை அழகிய கையொன்றில் ஏந்திப் பல ஊர்களிலும் திரிந்து மக்கள் உணவாகத் தரும் பிச்சையைத் தனக்கு உணவாக ஏற்றுப் பற்பலவாறு கூறிக்கொண்டும், வாள் போன்ற நீண்ட கண்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாக ஏற்று விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று அப்பெருமான் திருவடிகளில் சிறந்த மலர்களைத் தூவித் தலைவனாக விளங்கும் அவன் தாள் நிழலைச் சார்வோம்.