பக்கம் எண் :

562திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


430. கனமலர்க்கொன்றை யலங்கலிலங்கக்

காதிலொர் வெண்குழையோடு

புனமலர்மாலை புனைந்தூர்

புகுதியென்றே பலகூறி

வனமுலைமாமலை மங்கையொர்பாக

மாயவன்வாழ்கொளி புத்தூர்

இனமல ரேய்ந்தனதூவி

யெம்பெருமானடி சேர்வோம். 5

431. அளைவளர்நாக மசைத்தனலாடி

யலர்மிசை யந்தணனுச்சிக்

களைதலை யிற்பலிகொள்ளுங்

கருத்தனே கள்வனேயென்னா

__________________________________________________

5. பொ-ரை: கார்காலத்து மலராகிய கொன்றை மலர்மாலை தன் திருமேனியில் விளங்க, ஒரு காதில் வெண்குழையணிந்து, முல்லை நிலத்து மலர்களால் தொடுக்கப்பெற்ற மாலைகளைச் சூடிப் பல ஊர்களுக்கும் சென்று பற்பல கூறிப் பலியேற்று அழகிய தனங்களையுடைய மலைமகளாகிய பார்வதியை ஒருபாகமாகக் கொண்ட எம்பிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று நமக்குக்கிட்டிய இனமான மலர்களைத் தூவி அவன் அடிகளைச் சேர்வோம்.

கு-ரை: இதுவும் அது. கனமலர் - பொன்போலுமலர். அலங்கல் - மாலை. புனமலர் - முல்லைநிலத்துப் பூக்கள். புகுதி - புகுவாய். ஏய்ந்தன - அருச்சிக்கத்தகுந்தன.

6. பொ-ரை: புற்றின்கண் வாழும்பாம்பினை இடையில் கட்டி, சுடுகாட்டில் ஆடி, தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் உச்சித் தலையைக் கொய்து, அத்தலையோட்டில் பலிகொள்ளும் தலைவனே, நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கள்வனே, என்று, வளையல் ஒலிக்கும் முன் கையையுடைய பார்வதி தேவியை ஒருபாகமாகக் கொண்ட சிவபெருமான் உறையும் திருவாழ்கொளிபுத்தூர் சென்று, மொட்டவிழ்ந்த நறுமலர்களைத்தூவி அப்பெருமானின் தாளினைகளைச் சார்வோம்.

கு-ரை: கருத்தனே! கள்வனே! என்று மலர்தூவித் தாழ்ந்து