43. திருக்கற்குடி
பதிக வரலாறு:
திருப்பராய்த்துறையை வழிபட்டு வந்தருள்கின்ற
காழிப் பிள்ளையார், திருக்கற்குடி மலையை அடைந்தார்கள்.
அம்மலைமேல் எழுந்தருளியுள்ள கனகக்கொழுந்தை - திரிபுரம்
எரித்த வீரரை - விடையாளியைப் போற்றி ‘வடந்திகழ்‘
என்னும் இப்பதிகத்தையருளிச் செய்தார்கள்.
பண் : தக்கராகம்
பதிக எண்: 43
திருச்சிற்றம்பலம்
459. வடந்திகழ் மென்முலை யாளைப்
பாகம தாக மதித்துத்
தடந்திரை சேர்புனன் மாதைத்
தாழ்சடை வைத்த சதுரர்
இடந்திகழ் முப்புரி நூலர்
துன்பமொ டின்பம தெல்லாம்
கடந்தவர் காதலில் வாழுங்
கற்குடி மாமலை யாரே. 1
__________________________________________________
1. பொ-ரை: திருக்கற்குடி மாமலையை
விரும்பி அதன்கண் வாழும் இறைவர், முத்துவடம்
விளங்கும் மெல்லிய தனங்களை உடைய உமையம்மையை
மதித்து இடப்பாகமாகக் கொண்டு பெரிய அலைகள்
வீசும் கங்கை நங்கையைத் தாழ்கின்ற சடைமிசை வைத்துள்ள
சதுரப்பாடுடையவர்: திருமேனியின் இடப்பாகத்தே
விளங்கும் முப்புரிநூலை அணிந்தவர். இன்ப துன்பங்களைக்
கடந்தவர்.
கு-ரை: ஒருமாதை முடியிலும், ஒருமாதைப்
பாகத்திலும் வைத்தும், பிரமசாரியாயிருப்பவர் கற்குடியார்
என்கின்றது. முப்புரி நூலர் என்றது ‘பவன் பிரமசாரியாகும்‘
என்பதை விளக்க. வினையின் நீங்கிய முதல்வனாதலின்,
வினைபற்றி நிகழ்வனவாகிய துன்ப இன்பங்கள்
அவரைப் பாதியா என்பது விளக்கக் ‘கடந்தவர்‘ என்றார்.
குருவருள்: "துன்பமொடு இன்பம தெல்லாம்
கடந்தவர் காதலில்
|