பக்கம் எண் :

588திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


464. உலந்தவ ரென்ப தணிந்தே

ஊரிடு பிச்சைய ராகி

விலங்கல்வில் வெங்கன லாலே

மூவெயில் வேவ முனிந்தார்

நலந்தரு சிந்தைய ராகி

நாமலி மாலையி னாலே

கலந்தவர் காதலில் வாழுங்

கற்குடி மாமலை யாரே. 6

465. மானிட மார்தரு கையர்

மாமழு வாரும் வலத்தர்

ஊனிடை யார்தலை யோட்டி

லுண்கல னாக வுகந்தார்

தேனிடை யார்தரு சந்தின்

திண்சிறை யாற்றினை வித்திக்

கானிடை வேடர் விளைக்குங்

கற்குடி மாமலை யாரே. 7

__________________________________________________

6. பொ-ரை: நன்மை அமைந்த மனமுடையவராய் நாவினால் புகழும் சொல் மாலைகளாகிய தோத்திரங்களினாலே இறைவன் திருவருளில் கலந்த மெய்யடியார்கள் அன்போடு வாழும் திருக்கற்குடி மாமலை இறைவர், இறந்தவர்களின் எலும்பை அணிந்து, ஊர் மக்கள் இடும் பிச்சையை ஏற்கும் பிட்சாடனராய் மேருமலையாகிய வில்லிடைத் தோன்றிய கொடிய கனலால் முப்புரங்களும் வெந்தழியுமாறு முனிந்தவர்.

கு-ரை: பிட்சாடன மூர்த்தியாய் மூவெயிலை முனிந்தவர் இவர் என்கின்றது. உலந்தவர் - இறந்தவர் என்பது. அணிந்து - எலும்புகளைச்சூடி. விலங்கல் - மேருமலையாகிய வில். நாமலி மாலை - நாவில் மலிந்த தோத்திரப் பாமாலை. நலந்தரு சிந்தை - காமம் வெகுளி மயக்கம் முதலிய மூன்றும் கெட்ட மனம். கலந்தவர் - ஒருமைப் பட்டவர்கள். மனம் ஒன்றிய முனி புங்கவர்கள் வாழும் கற்குடி மலை என்றதால் யோகியர் இடம் இது என அறிவித்தவாறு.

7. பொ-ரை: தேனடைகள் பொருந்திய சந்தன மரங்களுக்கிடையே வலிய கரைகளைக் கட்டி, தினைகளை விதைத்துக்