477. ஏவலத்தால்விச யற்கருள்செய்து
இராவண னையீடழித்து
மூவரிலும்முத லாய்நடுவாய
மூர்த்தியை யன்றிமொழியாள்
யாவர்களும்பர வும்மெழிற்பாச்சி
லாச்சிரா மத்துறைகின்ற
தேவர்கள்தேவரோ சேயிழைவாடச்
சிதைசெய்வதோ விவர்சேர்வே. 8
478. மேலதுநான்முக னெய்தியதில்லை
கீழது சேவடிதன்னை
நீலதுவண்ணனு மெய்தியதில்லை
யெனவிவர் நின்றதுமல்லால்
ஆலதுமாமதி தோய்பொழிற்பாச்சி
லாச்சிரா மத்துறைகின்ற
பாலதுவண்ணரோ பைந்தொடிவாடப்
பழிசெய்வதோ விவர்பண்பே. 9
__________________________________________________
8. பொ-ரை: அம்பின் வலிமையால் விசயனோடு
போரிட்டு வென்று அவனுக்குப் பாசுபதாஸ்திரம் வழங்கி,
அருள் செய்தவரும் இராவணன் பெருவீரன் என்ற புகழை
அழித்தவரும், மும்மூர்த்திகளுக்கும் தலைவராய் அவர்கட்கும்
நடுவே நின்று படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலைப்
புரிபவராய் எல்லோராலும் துதிக்கப் பெறும் திருப்பாச்சிலாச்சிராமத்தில்
உறையும் மகாதேவராய சிவபிரான் திருப்பெயரையன்றி
வேறு வார்த்தைகள் பேசுவதறியாத இப்பெண்ணை வாடச்
சிதைவு செய்தல் இவருடைய தொடர்புக்கு அழகிய செயல்
ஆகுமோ?
கு-ரை: அண்டினாரைக் காத்து மிண்டினாரை
அழிக்கும் பெருமையர் இவர் என்கின்றது. ஏ வலத்தால்
- அம்பின் வலிமையால். ஈடு - வலிமை. ‘இராவணன் தன்னை’
என்றும் பாடம்.
9. பொ-ரை: மேலே உள்ள திருமுடியை நான்முகன்
தேடிக் கண்டான் இல்லை: கீழே உள்ள திருவடியை நீல நிறத்தை
உடைய திருமால் தேடி அடைந்ததுமில்லை என்று உலகம்
புகழுமாறு ஓங்கி
|