பக்கம் எண் :

60முதல் திருமுறையின் உரைத்திறம்(முதல் திருமுறை)


அப்பெருமான் பிள்ளையாருக்குத் தம் அருளால் திருவேடம் காட்டியருள, அதனைப் பிள்ளையார் இப்பதிகம் ஐந்தாம் பாடலில் ‘கண்ணார் தரும் உருவாகிய கடவுள்’ என்றும், ஒன்பதாம் பாடலில் ‘உருவம் விளம்பட்டு அருள் செய்தான்’ எனவும் குறிப்பிட்டருளிய செய்தியை இயம்புகிறார்.

ஈ) 28- திருச்சோற்றுத்துறை

கண்டியூரை வணங்கிய பிள்ளையார் அங்கிருந்து திருச்சோற்றுத்துறை செல்லும் வழியில் அருளிய இப்பதிகத்தைச் சேக்கிழார் பெருமான் ‘ஒப்பில் வண்தமிழ்மாலை’ என்று சிறப்பிக்கிறார். இப்பதிகத்தில் ‘ஒளி வெண்ணீற்றப்பர் உறையும் செல்வம் உடையார்’ என இறைவன் திருநாமமாகிய ‘தொலையாச் செல்வர்’ என்பது தோற்றுவிக்கப்படுகிறது - என நுட்பமான செய்திகளை ஆய்ந்து கூறுவதனை இத்தலைப்பில் பல இடங்களிலும் காணலாம்.

2. பதிகத்தில் சொல்லப்பட்டவற்றைச் சுருக்கி உரைத்தல்:

அ) 91- திருவாரூர் - திருஇருக்குக்குறள்

வேதங்களுள் இருக்கு, மந்திரவடிவாக உள்ளது. மந்திரம் சொற்சுருக்கம் உடையது. எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்றவல்லது. அதுபோல இப்பதிகம் அமைந்துள்ளது.

அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கும் பாசத்தால் இரு வினைக்கு ஈடாகக் கருவயிற் பிண்டமாய் வளர்ந்து பிறந்து, பரிபாக முற்ற வினைகள் துன்ப இன்பங்களை ஊட்டுகின்ற காலத்து வருந்தி மகிழ்ந்து, அலைகின்ற ஒழியாத் துன்பத்தினின்றும் உய்தி வேண்டும் உத்தமர்களை அழைத்து அன்போடு மலர் தூவுங்கள், கைகளால் தொழுங்கள், எடுத்து வாழ்த்துங்கள், உங்களுடைய பற்று அறும், வினைகள் விண்டுபோம், இன்பமுத்தி எய்தலாம் எனப் பயனும் வழியும் வகுப்பன இப்பத்துப் பாடல்கள் என்கிறார்.

ஆ) 108 - திருப்பாதாளீச்சுரம்

இப்பதிகம் முழுதும் செஞ்சடைமேல் பிறை, ஊமத்தம், கொன்றை இவற்றை அணிந்தவனும், கங்கையை அணிந்து உமையை ஒருபாகத்து இருந்தருளச் செய்தவனும் ஆகிய இறைவன் உறை கோயில் பாதாளீச்சுரம் என்கின்றது. பெரும்பான்மையான பாடல்