480. அகமலியன்பொடு தொண்டர்வணங்க
வாச்சிரா மத்துறைகின்ற
புகைமலிமாலை புனைந்தழகாய
புனிதர்கொ லாமிவரென்ன
நகைமலிதண்பொழில் சூழ்தருகாழி
நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலிதண்டமிழ் கொண்டிவையேத்தச்
சாரகி லாவினைதானே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
11. பொ-ரை: உள்ளம் நிறைந்த அன்போடு
தொண்டர்கள் வழிபட ஆச்சிராமம் என்னும் ஊரில்
உறைகின்றவரும், அன்பர் காட்டும் நறுமணப்புகை நிறைந்த
மாலைகளைச் சூடியவரும், அழகும் தூய்மையும்
உடையவருமான சிவபெருமானை, மலர்ந்த தண்பொழில்கள்
சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய நற்றமிழ்வல்ல
ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய, நோய்தீர்க்கும்
மேன்மை மிக்கதும் உள்ளத்தைக் குளிர்விப்பதுமான
இத்தமிழ் மாலையால், ஏத்திப் பரவி வழிபடுவோரை
வினைகள் சாரா.
கு-ரை: இப்பாடல் பத்தும் வல்லாரை
வினைசாரா என்கிறது. அகமலி அன்பு - மனம் நிறைந்த
அன்பு. தகைமலி தண் தமிழ் - இன்றைக்கும் ஓதுவாரது நோய்
தீர்க்கும் தகுதி வாய்ந்த தமிழ்.
திருஞானசம்பந்தர் புராணம்
அணிகிளர் தாரவன் சொன்ன மாற்றம்
அருளொடுங் கேட்டந் நிலையின் நின்றே
பணிவளர் செஞ்சடைப் பாச்சின் மேய
பரம்பொரு ளாயின ரைப்ப ணிந்து
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல்செய்வ தோவிவர் மாண்ப தென்று
தணிவில் பிணித விர்க்கும் பதிகத்
தண்டமிழ் பாடினார் சண்பை நாதர்.
- சேக்கிழார்.
|
|