45. திருவாலங்காடு
பதிக வரலாறு:
புகலியாண்டகையார் தக்கோலம் என்னும்
திருத்தலத்தை அடைந்து திருஊறலை வணங்கிப் பதிகம்பாடிப்
பழையனூர், திருவாலங்காட்டிற்கு அருகே
வருகின்றார்கள். அப்போது இத்தலம் எம்மையாளும்
அம்மை திருத்தலையாலே நடந்து போற்றும் அம்மையப்பரின்
அணிநகரல்லவா? என்ற எண்ணம் உண்டாயிற்று. அதனை
மிதிக்க அஞ்சி அடுத்துள்ள ஊரிற்சென்று இரவு
பள்ளிகொண்டார்கள்.
இடையாமத்திலே பிள்ளையார் கனவிலே
பெருமானும் எழுந்தருளி ‘எம்மைப்பாட மறந்தனையோ’
என்று அருளிச் செய்தனர். அதனை உணர்ந்த
பிள்ளையார் வியந்தெழுந்து கருணையைப் போற்றித்
‘துஞ்ச வருவாரும் ’
என்ற இத்திருப்பதிகத்தை அருளிச்செய்தார்கள்.
இதில் பழையனூர் நீலிவரலாற்றை முதல் திருப்பாடலிலும்,
கனவில் வந்தருளிச்செய்ததை முதல் ஏழாந் திருப்பாடல்களிலும்
சிறப்பித்திருக்கிறார்கள். இச்செய்தியை மறுநாட்காலையில்
எல்லாருக்கும் அறிவித்துத் திருவாலங்காடு சென்று
ஆலங்காட்டப்பரை வழிபட்டுத் திருப்பாசூருக்கு வழிக்
கொண்டார்கள்.
குருவருள்: இத்திருப்பதிகத்தைப்
பண் - தக்கராகம் என்று தொன்று தொட்டு பதிப்பித்து
வருகின்றார்கள். ஆனால் சேக்கிழார் "பஞ்சுரமாம்
பழையதிறம் கிழமை கொள்ளப்பாடினார் ஞானசம்பந்தர்"
என்பதால் இது பழம் பஞ்சுரப்பண்ணாகும். பழம் பஞ்சுரப்
பண் வரிசையில் மூன்றாம் திருமுறையில் இடம் பெறத்தக்கதே
முறையாகும். ஓதுவார்கள் இது விவரம் தெரிந்து பழம்
பஞ்சுரப் பண்ணாகப் பாடுதல் நலம்.
"துஞ்சவரு வாரென்றே யெடுத்த ஓசைச்
சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடல்,
எஞ்சலிலா வகைமுறையே பழைய னூரார்
இயம்புமொழி காத்தகதை சிறப்பித் தேத்தி,
|