கோடடைந்த மால்களிற்றுக்
கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழுஞ்
சேய்ஞலூர் மேயவனே. 6
521. பீரடைந்த பாலதாட்டப்
பேணாத வன்றாதை
வேரடைந்து பாய்ந்ததாளை
வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித்
தலைமைவ குத்ததென்னே
சீரடைந்த கோயின்மல்கு
சேய்ஞலூர் மேயவனே. 7
கு-ரை: பன்றியைத்துரத்திவந்து வேடனாகி
விசயனோடு சண்டையிட்டது ஏன் என்கின்றது. ஏனம் -
பன்றி. இது விசயன் தவத்தைக் கெடுத்துக் கொல்லவந்த
மூகாசுரன் என்னும் பன்றி. இதனைத் திருவுள்ளம் பற்றிய
சிவபெருமான் பன்றியைக் கொன்று விசயனைக்காத்தனர்
என்பது வரலாறு. கோடு - கொம்பு. மால் - பெரிய; மயக்கமுமாம்.
கோச்செங்கண்ணான் செய்த கோயில்களில் ஒன்றாதலின்
அவற்கு அருள்செய் சேய்ஞலூர் மேயவனே என்றார். சேடு
- பெருமை.
7. பொ-ரை: சிறப்புமிக்க மாடக்
கோயிலாய் விளங்கும் திருச்சேய்ஞலூரில்
விளங்கும் இறைவனே! பசுவின் முலைக்காம்பின் வழிச்
சுரந்து நின்ற பாலைச் சண்டீசர் மணலால் தாபித்த
இலிங்கத்துக்கு ஆட்டி வழிபட, அதனை விரும்பாது சினந்து
பாற்குடத்தை இடறிய தன் தந்தையின் காலைத் தடிந்த
சண்டீசரின் பக்தியை மெச்சி உன் தாரையும் மாலையையும்
சூட்டி அவரைச் சிவகணங்களின் தலைவர் ஆக்கியது
ஏனோ?
கு-ரை: தந்தையின் தாளைவெட்டிய சண்டீசற்கு
மாலைசூட்டித் தலைமை தந்ததென்னே என்கின்றது. பீர்-சுரப்பு.
பேணாது-அது சிவார்ப்பணம் ஆன அருமைப்பாட்டை அகங்கொள்ளாது.
அவன் என்றது விசாரசருமனை. தாதை - எச்சதத்தன். வேர்
அடைந்து பாய்ந்த தாளை - வேரூன்றிப் பாற்குடத்தின்
மேல் பாய்ந்ததாளை; அதாவது
|