538. இயங்குகின்ற விரவிதிங்கண்
மற்றுநற் றேவரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பாற்
சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதீ சாமவேதா
காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய்
வலிவலமே யவனே. 2
539. பெண்டிர்மக்கள் சுற்றமென்னும்
பேதைப்பெருங் கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன்
வேதனைநோய் நலியக்
கண்டுகண்டே யுன்றனாமங்
காதலிக்கின்ற துள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை
வலிவலமே யவனே. 3
__________________________________________________
2. பொ-ரை: வானவெளியில்
இயங்குகின்ற ஞாயிறு, திங்கள் மற்றும் நல்ல
தேவர்கள் எல்லோரும் அச்ச மேலீட்டினால்
உன்னைப் பரம் பொருள் என்று தம் சித்தம்
தெளியாதவராயுள்ளனர். விளங்கும் சோதி வடிவினனே,
சாம வேதம் பாடி மகிழ்பவனே, காமனைக்
காய்ந்தவனே, எவ்வாறு உன்னைத் தெளிவது என்று
யானும் மயங்குகின்றேன். வந்து அருள்புரிவாயாக.
கு-ரை: தேவரெல்லாரும் பயத்தால்
பற்றப்பட்டுச் சித்தம் தெளிகிலார்கள்: நானோ
மயங்குகின்றேன்: வந்தருள் செய் என்கின்றது. இரவி
- சூரியன். திங்கள் - சந்திரன். பயங்களாலே பற்றி
- அச்சத்தால் பற்றப்பட்டு.
3. பொ-ரை: வண்டுகள் தேனுண்ணற்
பொருட்டு மலர்களைக் கிண்டி இசை பாடும் சோலைகள்
சூழ்ந்த திருவலிவலத்துள் மேவிய இறைவனே, மனைவி
மக்கள் சுற்றம் முதலான பாசப் பெருங்கடலை இளைய
காலத்திலேயே கடந்து வாழ்ந்தேன் அல்லேன்.
வேதனை, நோய் ஆகியன நலிய உலகியற் பாசங்கள்
துன்பம் தருவன என்பதைக்
|