பக்கம் எண் :

 56. திருப்பாற்றுறை685


வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே. 8

598. இருவர் தேவருந் தேடித் திரிந்தினி
ஒருவ ராலறி வொண்ணிலன்
மருவு நீள்கழன் மாற்பேற் றடிகளைப்
பரவு வார்வினை பாறுமே. 9

599. தூசு போர்த்துழல் வார்கையிற் றுற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலும்
தேச மல்கிய தென்றிரு மாற்பேற்றின்
ஈச னென்றெடுத் தேத்துமே. 10

__________________________________________________

அவனுக்கு வரங்கள் பலவற்றையும் மிகுதியாக அளித்தருளிய எமது திரு மாற்பேற்று அடிகளைப் பரவப் பாவம் கெடும்.

கு-ரை: இராவணன் வலிகெடுத்து வரமளித்த இறைவனைப் பரவப் பாவம் கெடும் என்கின்றது, உரை - புகழ். ஒல்கிட - பணிய.

9. பொ-ரை: திருமால் பிரமன் ஆகிய இருவரும் அடிமுடி காணத்தேடித் திரிந்தும் ஒருவராலும் அறிய ஒண்ணாத இயல்பினனாகிய, திருமாற்பேற்றுள் விளங்கும் சிவபிரானுடைய பெருமை விரிந்த திருவடிகளைப் பரவித் துதிப்பார் வினைகள் கெடும்.

கு-ரை: இறைவன் அடிகளைப் பரவுவார் வினைசிதறும் என்கின்றது. தேவர் இருவர் - அயனும் மாலும். இருவர் தேடியும் ஒருவராலும் அறிய முடியாதவன் என்பது கருத்து.

10. பொ-ரை: ஆடையை மேனிமேற் போர்த்து உழல்வோரும், கைகளில் உணவை ஏற்று உண்ணும் இழிந்தோருமாகிய புத்த, சமணர்களின் உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். புகழ் பொருந்திய அழகிய திருமாற்பேற்றுள் விளங்கும் ஈசன் என்று பெருமானைப் புகழ்ந்து போற்றுமின்.

கு-ரை: சமணர் புத்தர் சழக்குரை கொள்ளாதீர்; திருமாற் பேற்றீசன் என்று ஏத்தும் என்கின்றது. தூசு - ஆடை. துற்று - உணவு. நீசர் -இழிந்தவர். கொள்ளெலும் - கொள்ளாதீர்கள்; இது அரு வழக்கு. தேசம் - ஒளி.