பக்கம் எண் :

 56. திருப்பாற்றுறை687


56. திருப்பாற்றுறை

பதிக வரலாறு:

திருத்தவத்துறையை வணங்கிப் பிறதலங்களையும் வணங்கத் திருவுளம்பற்றிய பிள்ளையார் திருப்பாற்றுறையை அடைந்தார்கள். அத்தலத்து எழுந்தருளியுள்ள ஏறுயர்த்த பெருமானை வணங்கிக் ‘காரார் கொன்றை ’ என்னும் இப்பதிகத்தை

அருளிச் செய்தார்கள். இப்பதிகத்தை அருளுகின்ற காலத்துப் பிள்ளையாரின் திருவுள்ளம் சன்மார்க்க நெறிக்கண் நாயக நாயகித்தன்மையில் ஈடுபடுவதாயிற்று. தலைவியாகிய தன்னுள்ளத்தில் தலைவன் உருவன்றி வேறொன்றும் தோன்றாத நிலையில், ஊடியும் பிரிந்தும் நுகரும் இன்பநிலைகள் தோன்ற இத்திருப் பதிகத்தை அருளிச்செய்தார்.

பண்: பழந்தக்கராகம்

பதிக எண்:56

திருச்சிற்றம்பலம்

601. காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யாரா ராதி முதல்வரே. 1

___________________________________________________

1. பொ-ரை: உலக மக்கள் நாள்தோறும் வந்து வழிபட்டுப் போற்றும், ஆத்தி மலர் அணிந்த திருப்பாற்றுறையில் விளங்கும் ஆதிமுதல்வராகிய பெருமானார் கார்காலத்தே மலரும் கொன்றை மலர் மாலை சூடிய திருமுடியினராய் அன்பு கனிந்த நம் சிந்தையைத் தம்மிடமே செல்லச் செய்தார்.

கு-ரை: திருஞானசம்பந்தப் பிள்ளையார் தம்மைப் பெண்ணாக்கி, தலைவனாகத் திருப்பாற்றுறைத் திருமூலநாதரைப் பாவித்து ஈடுபட்டு, சிறந்த சிந்தை தம்மிடமே செல்லச் செய்தார் என்கின்றார். கார் ஆர் கொன்றை - கார்காலத்துத் கொன்றை. சிந்தை செலச்செய்தார். அடியார்கள் சிந்தையைச் தம்மிடமே செல்லச்செய்தார். ஆரார் - தெவிட்டாதவர். ஆதிமுதல்வர் என்றது திருமூல நாதர் என்னும் தலத்திறைவர் பெயரைக் குறிப்பது.