பக்கம் எண் :

 57. திருவேற்காடு691


ஏன மன்னமு மானவ ருக்கெரி
ஆன வண்ணத்தெ மண்ணலார்
பான லம்மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே. 9

610. வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்தெ னன்னலம் வௌவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே. 10

__________________________________________________

9. பொ-ரை: நீலோற்பல மலர்கள் நிறைந்த நீர் நிலைகளோடு கூடிய திருப்பாற்றுறையுள் வானகத்தே விளங்கும் வெண்மையான பிறை மதியைச் சூடி எழுந்தருளியுள்ள மைந்தராகிய இறைவர், பன்றியும், அன்னமுமாய் அடிமுடி தேடிய திருமால், பிரமன் ஆகியோருக்கு அழலுருவமாய் ஓங்கி நின்ற அண்ணலார் ஆவார்.

கு-ரை: தீப்பிழம்பாகிய செல்வரே வெண்பிறை அணிந்த மைந்தராக இருக்கின்றார் என்கின்றது. ஏனம் - பன்றி. பானல் - நீலோற்பலம்.

10. பொ-ரை: பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்துள்ள திருப்பாற்றுறையுள் எழுந்தருளியுள்ள மைந்தராகிய இறைவர், மேனி மீது வெந்த நீறு பூசியவராய், கையில் வேலேந்தியவராய், மார்பில் பூணூல் அணிந்தவராய் வந்து என் அழகினை வவ்விச் சென்றார். அவர் முன்னரே மலைமகளை மணந்த மணாளர் ஆவார்.

கு-ரை: பாற்றுறை மணாளர் என்நலம் வௌவினார் என்கின்றது. இதில் தலைவி தலைவருடைய உள்ளத் தூய்மையைக் காட்டும் வரரத்தை விளக்கும் வேலையும், இதுவரை மணமாகாமையைக் காட்டும் நூலையுங்கண்டு காதலித்தேன், அவர் என்நலத்தை வௌவினார் என்பதுதோன்ற, நீற்றினர் வேலினர் நூலினராய்வந்து என் நலத்தை வௌவினார் என்கின்றார். எம்மணாளர் என்னாது ஓர் மணாளர் என்றது மலைமகளையும் அலைமகளையும் முன்னரே மணந்திருக்கின்றமை குறிப்பிக்க. இப்பதிகத்துள் இராவணனை அடர்த்ததும், புறச்சமயிகளைப் பற்றிய குறிப்பும் கூறாமை, தலைவனும்