பக்கம் எண் :

 57. திருவேற்காடு693


57. திருவேற்காடு

பதிக வரலாறு:

திருக்காளத்தி மலையை வணங்கிக் காளத்தியிற் சில காலம் தங்கியிருந்த காழிப் பிள்ளையார் அடியார் கூட்டத்தோடு காடும் மலையுங் கடந்து, வழியில் பலதலங்களையும் வணங்கிக் கொண்டு, பாலியாற்று வடகரையில் இருக்கும் திருவேற்காட்டை வந்தடைந்தார்கள். அங்குள்ள செழுஞ்சுடர் பொற்கோயிலை அடைந்து பணிந்து, ‘ஒள்ளிது உள்ள ’ என்னும் இப்பதிகத்தையருளிச் செய்தார்கள்.

பண்: பழந்தக்கராகம்

பதிக எண்: 57

திருச்சிற்றம்பலம்

612. ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே. 1

613. ஆடனாக மசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு

__________________________________________________

1. பொ-ரை: மிகவும் சிறந்த மெய்ப்பொருளை அன்போடு எண்ணினால் அவ்வெண்ணம் நற்கதிக்கு வாயிலாம். அத்தகைய மெய்ப்பொருளாய் வெண்மையான ஒளி வடிவினனாய் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள இவ்விறைவனை நினைந்தவர்கள் இவ்வுலகினில் உயர்ந்தவர் ஆவர். அவனைக் கண்டு தெளிந்த அவர்கள் தேவர்களாவர்.

கு-ரை: மிகவும் உயர்ந்ததை எண்ணின் அது நற்கதிக்கு வாயிலாம்; ஆதலால் வேற்காடு எண்ணியவர்கள் இவ்வுலகில் தேவராவர் என்கின்றது. ஒள்ளிது - உயர்ந்தபொருளை. உள்ள - எண்ண. உள்ளம் - உயிருமாம். உள்ளியார் - எண்ணியவர்கள்.

2. பொ-ரை: ஆடுதற்குரிய பாம்பினை இடையிற் கட்டிய, அளவற்ற பல்வேறு வடிவங்களைக் கொண்டருளிய திருவேற்காட்டு