பக்கம் எண் :

698திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


58. திருக்கரவீரம்

பதிக வரலாறு.

திருஞானசம்பந்தசுவாமிகள் திருச்சாத்தங்குடி சென்று பெருமானை வணங்கிய பின்பு, திருக்கரவீரத்தையடைந்து நம்பர்தாளை வணங்கி ‘அரியும் நம்வினை‘ என்னும் இத்திருப்பதிகத்தை அருளிச்செய்தார்கள்.

பண்: பழந்தக்கராகம்

பதிக எண் : 58

திருச்சிற்றம்பலம்

623. அரியு நம்வினை யுள்ளன வாசற
வரிகொண் மாமனி போற்கண்டம்
கரிய வன்றிகழுங்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே. 1

624. தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே. 2

_______________________________________________

1. பொ-ரை: வரிகள் அமைந்த சிறந்த நீலமணிபோலக் கண்டம் கறுத்தவனாய், விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானாகிய இறைவன் திருவடிகளைத் துதித்தால் நம் வினைகளாக உள்ளன யாவும் முற்றிலும் கழியும்.

கு-ரை: கரவீரத்து இறைவன்கழல் பேண வினையுள்ளன எல்லாம் அரியும் என்கின்றது. கழல்பேண நம்வினையுள்ளன அரியும் எனக்கூட்டுக. வரிகொள் மாமணி - நிறங்கொண்ட நீலமணி.

2. பொ-ரை: தாழ்ந்து தொங்கும் சடைமுடிகளை உடைய உயர்ந்தோனாய் இளம்பிறையோடு கங்கையை உடனாகச் சூடிய, திருக் கரவீரத்தில் விளங்கும் சங்கரன் திருவடிகளை வழிபட்டால் நம்மைப் பற்றிய வினைகள் தங்கா.