58. திருக்கரவீரம்
பதிக வரலாறு.
திருஞானசம்பந்தசுவாமிகள்
திருச்சாத்தங்குடி சென்று பெருமானை வணங்கிய
பின்பு, திருக்கரவீரத்தையடைந்து நம்பர்தாளை
வணங்கி ‘அரியும் நம்வினை‘ என்னும்
இத்திருப்பதிகத்தை அருளிச்செய்தார்கள்.
பண்: பழந்தக்கராகம்
பதிக எண் : 58
திருச்சிற்றம்பலம்
623. அரியு நம்வினை யுள்ளன வாசற
வரிகொண் மாமனி போற்கண்டம்
கரிய வன்றிகழுங்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே. 1
624. தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே. 2
_______________________________________________
1. பொ-ரை: வரிகள் அமைந்த சிறந்த
நீலமணிபோலக் கண்டம் கறுத்தவனாய், விளங்கும்
திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள
எம்பெருமானாகிய இறைவன் திருவடிகளைத் துதித்தால்
நம் வினைகளாக உள்ளன யாவும் முற்றிலும் கழியும்.
கு-ரை: கரவீரத்து இறைவன்கழல் பேண
வினையுள்ளன எல்லாம் அரியும் என்கின்றது.
கழல்பேண நம்வினையுள்ளன அரியும் எனக்கூட்டுக.
வரிகொள் மாமணி - நிறங்கொண்ட நீலமணி.
2. பொ-ரை: தாழ்ந்து தொங்கும்
சடைமுடிகளை உடைய உயர்ந்தோனாய் இளம்பிறையோடு
கங்கையை உடனாகச் சூடிய, திருக் கரவீரத்தில்
விளங்கும் சங்கரன் திருவடிகளை வழிபட்டால்
நம்மைப் பற்றிய வினைகள் தங்கா.
|