பக்கம் எண் :

 9. திருத்தூங்கானைமாடம்707


639. பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா

படர்நோக் கிற்கண் பவளந்நிற

நன்னீர்மை குன்றித் திரைதோலொடு

நரைதோன் றுங்கால நமக்காதன்முன்

பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற்

புனல்பொதிந்த புன்சடையி னானுறையும்

தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்

தூங்கானை மாடந் தொழுமின்களே. 6

640. இறையூண் டுகளோ டிடுக்கணெய்தி

யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்

நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லா

நீள்கழ லேநாளு நினைமின்சென்னிப்

பிறைசூ ழலங்க லிலங்குகொன்றை

பிணையும் பெருமான் பிரியாதநீர்த்

துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர்

தூங்கானை மாடந் தொழுமின்களே. 7

_______________________________________________

6. பொ-ரை: புலன் நுகர்ச்சிக்குரிய பலதன்மைகளும் குறைந்து காதுகள் கேளாமல் கண்களில், சென்று பற்றும் பார்வைகுன்றிப் பவளம் போன்ற உடல்நிறம் குன்றிச் சுருங்கிய தோலோடு நடை தோன்றும்மூப்புக் காலம் நம்மை வந்து அணுகுமுன்பொன் போன்ற நிறம் பொருந்திய கங்கை தங்கிய செஞ்சடையினையுடைய சிவபிரான் உறையும், பழமையான புகழையுடைய கடம்பைநகர்த் தடங்கோயி லாகிய திருத்தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.

கு-ரை: காது, கண் இவைகெட்டு, தோல் சுருங்கி, நரை தோன்றுவதற்குமுன் தொழுமின் என்கின்றது. பல் நீர்மை குன்றி - புலன் நுகர்ச்சிக்கு ஏற்ற பலதன்மைகளும் குறைந்து. படர் நோக்கின் - படலம் மூடியதால். பவளந்நிற நல்நீர்மை - செவ்வரி பரந்த நல்லநிலைமை. திரை - திரங்கிய. பொன் நீர்மை துன்ற - பொன்போன்ற நன்மை பொருந்த: புறந்தோன்றும் - உருத்தாங்கிக் காட்சியளிக்கும்.

7. பொ-ரை: குறைந்த உணவோடு பல்வகைத் துன்பங்களையும் எய்தி வருந்தும் இழிந்த வாழ்க்கை நீங்க, தவமாகிய நிறைந்த உணவைப் பெரும் வழியாதென மயங்கி நிற்கும்நீவிர் அனைவீரும்.