744. மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும்
வானோர் பெருமானார்
நஞ்சைக்கண்டத் தடக்குமதுவு
நன்மைப் பொருள்போலும்
வெஞ்சொற்பேசும் வேடர்மடவா
ரிதண மதுவேறி
அஞ்சொற்கிளிக ளாயோவென்னும்
அண்ணா மலையாரே. 2
745. ஞானத்திரளாய் நின்றபெருமா
னல்ல வடியார்மேல்
ஊனத்திரளை நீக்குமதுவு
முண்மைப் பொருள்போலும்
ஏனத்திரளோ டினமான்கரடி
யிழியு மிரவின்கண்
ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல்
அண்ணா மலையாரே. 3
__________________________________________________
2. பொ-ரை: குத்து வெட்டு முதலிய
கொடிய சொற்களையே பேசும் வேடர்களின் பெண்கள்
தினைப்புனங்களில் பரண்மீது ஏறியிருந்து தினைகவர
வரும் அழகிய சொற்களைப் பேசும் கிளிகளை ஆயோ என
ஒலியெழுப்பி ஓட்டும் திருவண்ணாமலை இறைவர், மேகங்களைக்
கிழித்துச் செல்லும் பிறைமதியை முடியிற்சூடும் வானவர்
தலைவர். கடலிடைத் தோன்றிய நஞ்சையுண்டு கண்டத்தில்
அடக்கியவர். இச்செயல் உலகத்தை அழியாது
காக்கும் நன்மை கருதியதேயாகும்.
கு-ரை: அண்ணாமலையாராகிய பிறை
சூடிய பெருமான் நஞ்சையுண்டதும் நன்மைகருதியேயாம்
என்கின்றது. மஞ்சு - மேகம். வெஞ்சொல் பேசும் வேடர்
- பிடி எறி குத்து கொல்லு என்ற கொடிய சொற்களையே
பேசுகிற வேடர்கள். மடவார் - வேட்டுவத்தி. இதணம் -
பரண். ஆயோ என்பது கிளி ஓட்டும் ஒலிக் குறிப்பு.
3. பொ-ரை: இராப்போதில் பன்றிகளின்
கூட்டமும், மான் இனங்களும், கரடிகளும், ஒருங்கே இறங்கிவரும்
மலைச்சாரலில்
|