747. உருவிற்றிகழு முமையாள்பங்க
ரிமையோர் பெருமானார்
செருவில்லொருகால் வளையவூன்றிச்
செந்தீ யெழுவித்தார்
பருவிற்குறவர் புனத்திற்குவித்த
பருமா மணிமுத்தம்
அருவித்திரளோ டிழியுஞ்சாரல்
அண்ணா மலையாரே. 5
748. எனைத்தோரூழி யடியாரேத்த
விமையோர் பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும்
நிமல ருறைகோயில்
கனைத்தமேதி காணாதாயன்
கைம்மேற் குழலூத
அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல்
அண்ணா மலையாரே. 6
__________________________________________________
5. பொ-ரை: பெரிய வில்லை ஏந்திய குறவர்கள்
விளைநில வரப்புக்களில் குவித்து வைத்திருந்த பெரிய
முத்துக்களும் மணிகளும் அருவித்திரள்களின் வழியே
நிலத்தில் வந்து இழியும் திருவண்ணாமலை இறைவர்,
உருவத்தால் அழகிய உமையவளை ஒருபாகமாகக் கொண்டவர்.
இமையவர்கட்குத் தலைவர். பெரிய போர்வில்லை ஒரு
காலால் ஊன்றிக்கொண்டு வளைத்துக் கணை எய்து
முப்புரங்களும் செந்தீயால் அழிந்து விழுமாறு செய்தவர்.
கு-ரை: ஒரே உருவில் விளங்கும்
உமையொருபாகர், வில்வளைத்துத் திரிபுரத்தைச் செந்தீயாட்டியவர்
இவர் என்கிறது. செரு - போர். வில் ஒருகால் வளைய
ஊன்றி - வில்லினது ஒரு தலையை வளைவதற்காகக்
காலிற் பெருவிரலால் ஊன்றி. பரு வில் குறவர் -
பருத்த வில்லையுடைய குறவர்கள். குறவர் குவித்த முத்தங்கள்
அருவியோடு இழியும் சாரல் அண்ணாமலை என்க.
6. பொ-ரை: மலைச்சாரலில் புல் மேய்க்கச்
சென்ற ஆயன்கனைத்து மேய்ந்த தம் எருமைகளைக் காணாதவனாய்த்
தன் கையிலிருந்த வேய்ங்குழலை ஊத அவ்வளவில்
அனைத்தெருமைகளும் வீடு
|