755. சூலப்படையொன் றேந்தியிரவிற்
சுடுகா டிடமாகக்
கோலச்சடைக டாழக்குழல்யாழ்
மொந்தை கொட்டவே
பாலொத்தனைய மொழியாள்காண
வாடும் பரமனார்
ஏலத்தொடுநல் லிலவங்கமழும்
ஈங்கோய் மலையாரே. 2
756. கண்கொணுதலார் கறைகொண்மிடற்றார்
கரியி னுரிதோலார்
விண்கொண்மதிசேர் சடையார்விடையார்
கொடியார் வெண்ணீறு
பெண்கொள்திருமார் பதனிற்பூசும்
பெம்மா னெமையாள்வார்
எண்குமரியுந் திரியுஞ்சாரல்
ஈங்கோய் மலையாரே. 3
__________________________________________________
2. பொ-ரை: முத்தலைச் சூலம் ஒன்றைத்தமது
படைக்கலனாக ஏந்தி இரவில் சுடுகாட்டை இடமாகக்
கொண்டு அழகிய சடைகள் தாழ்ந்து தொங்கவும், குழல்
யாழ்மொந்தை ஆகிய இசைக் கருவிகள் முழங்கவும்,
பால் போன்று இனிய மொழியினை உடைய பார்வதி தேவி
காண ஆடும் பரமர் ஏலம் நல்ல இலவங்கம் முதலியன
கமழும் திருவீங்கோய்மலையின்கண் எழுந்தருளியுள்ளார்.
கு-ரை: சுடுகாட்டில் குழலும் யாழும்
முழவுங் கொட்ட, பாகம் பிரியாள் காண ஆடும்
பெருமான் இவர் என்கின்றது.
கோலச்சடை - அழகியசடை. குழல், யாழ்,
மொந்தையைக் கொட்ட என்றாலும், குழலை ஊத, யாழை
வாசிக்க, மொந்தையைக் கொட்ட எனக் கருவிகளுக்கேற்பப்
பொருள் கொள்க.
3. பொ-ரை: கண் ஒன்றைக்கொண்ட
நுதலினரும், விடக்கறை பொருந்திய கண்டத்தினரும்,
யானையின் தோலை உரித்துப் போர்த்த வரும்,
வானில் விளங்கும் மதியைச் சூடிய சடையினரும், விடைக்
|