பக்கம் எண் :

906திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


909. ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு
வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல்
ஞானத் துரைவல்லார் நாளும் பணிந்தேத்தக்
கானற் கடனாகைக் காரோ ணத்தானே. 6

910. அரையா ரழனாக மக்கோ டசைத்திட்டு
விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்
வரையார் வனபோல வளரும் வங்கங்கள்
கரையார் கடனாகைக் காரோ ணத்தானே. 7

____________________________________________________

6. பொ-ரை: பன்றியின் பல், பாம்பு ஆகியவற்றை மெய்யிற் பூண்டு, வானகத்தே இயங்கும் இளம்பிறை தங்கும் சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபெருமான், மெய்யறிவு மயமான சொற்களைப் பேசவல்ல அடியவர்கள் நாள்தோறும் பணிந்து போற்றச் சோலைகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

கு-ரை: ஞானிகள் பணிய இருப்பான் இவன் என்கின்றது. ஏனத்து எயிறு - பன்றிக்கொம்பு. அரவம் - பாம்பு. ஞானத்து உரைவல்லார் - சிவஞானத்தோடு செறிந்து இறைவன் புகழையே பேசவல்லவர்கள். கானல் - கடற்கரைச் சோலை.

7. பொ-ரை: இடையில் அழல்போலும் கொடிய நாகத்தைச் சங்கு மணிகளோடு இணைத்துக் கட்டிக் கொண்டு, மணம் கமழும் மலை போன்ற மார்பில் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைமையாளனாகியசிவபெருமான், மலைகள் மிதந்து வருவன போலக் கப்பல்கள் கரையைச் சாரும் கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

கு-ரை: சங்குமணியைச் சர்ப்பத்தோடு அணிந்தவன் இவன் என்கின்றது. அரை ஆர் அழல் நாகம் - இடுப்பில் பொருந்திய தீயைப்போல் கொடிய விடப்பாம்பு.

அக்கோடு - சங்குமணியோடு. அசைத்திட்டு - கட்டி. விரை - மணம். வரை ஆர்வன போல - மலைகள் நிறைந்திருப்பனபோல. வங்கங்கள் - தோணிகள். வங்கங்கள் வரையார்வனபோல வளரும் கரை எனக் கூட்டுக.