927. ஏறி லெருதேறு மெழிலா யிழையோடும்
வேறும் முடனுமாம் விகிர்த ரவரென்ன
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் மடியார்கட் கடையா குற்றமே. 2
928. சூடு மிளந்திங்கட் சூடர்பொற் சடைதாழ
ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை
நாடுந் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்
பாடும் மடியார்கட் கடையா பாவமே. 3
____________________________________________________
2. பொ-ரை: ஊர்தியாக எருது ஒன்றிலேயே
ஏறுபவனும், அழகிய உமையம்மையோடு ஒன்றாகவும் வேறாகவும்
விளங்கும் தன்மையை உடையவனுமாகிய சிவபெருமான்,
அன்பர்கள் எண்ணுமாறு மணங்கமழும் மலர்ப் பொய்கை
சூழ்ந்த நல்லூரில் விளங்குகின்றான். அப்பெருமான்
புகழைக் கூறும் அடியவர்களைக் குற்றங்கள் அடையா.
கு-ரை: அம்மையொடு உடனாயும் வேறாயும்
இருக்கும் பெருமானாகிய, நல்லூர் இறைவனைத் தோத்திரிப்பார்க்குக்
குற்றம் அடையா என்கின்றது.
ஏறில் எருது ஏறும் விகிர்தர் எனக் கூட்டிப்
பொருள்கொள்க. எருதன்றி வேறொன்றிலும் அவர்க்கு
விருப்பில்லை என்றவாறு. எழில் - அழகு. வேறாதல் -
அம்மையை இடப்பாகத்துக் கொண்டிருத்தல். உடனாதல்
- தன்மேனியில் ஒருபங்காய்க் கொண்டு அர்த்த நாரீச்சுரராக
இருத்தல். இதுவும் உருவில் வேறுபட்டுத் தோன்றுதலின்
சத்தியைத் தன்னுளடக்கியிருக்கும் நிலை கூறிற்றுமாம்.
3. பொ-ரை: இளம்பிறை, முடியிற்சூடி, ஒளி
விடுகின்ற பொன் போன்ற சடைகள் தாழ, தலையோட்டையே
உண்கலனாகக் கொண்டு, ஒவ்வோர் ஊரிலும் மகளிர்
இடும் பிச்சையை நாடிச் செல்லும் அறநெறியாளனாகிய
நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியவர்களைப் பாவங்கள்
அடையா.
கு-ரை: ஊரிடு பிச்சையை நாடும் முறையையுடைய
நல்லூர்ப் பெருமானைப் பாடுகின்ற அடியவர்களைப் பாவம்
அடையா என்கின்றது. சுடர் பொன் சடை - ஒளிவிடுகின்ற
பொன் போலும் திருச்சடை.
|