பக்கம் எண் :

 91. திருவாரூர்945


987. வெய்ய வினைதீர, ஐய னணியாரூர்
செய்ய மலர்தூவ, வைய முமதாமே. 7

988. அரக்க னாண்மையை, நெருக்கி னானாரூர்
கரத்தி னாற்றொழத், திருத்த மாகுமே. 8

___________________________________________________

பாசமறுத்த நம்பியாரூரர்க்குத் தோழரானது போல நமக்கும் நேசமாவர் என்ற நினைப்பு உண்டாகும். அன்பு முதிரும் என்றுமாம்.

7. பொ-ரை: கொடிய வினைகள் தீர வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய அனைத் துயிர்க்கும் தலைவனாகிய இறைவனைச் செம்மையான மலர்களைத் தூவி வழிபடுங்கள். உலகம் உம்முடையதாகும்.

கு-ரை: இருவகை வினையும் தீரவேண்டும் என்றும், தீர்ந்தால் உலகமுழுதும் உடைமையாம் என்றும் உணர்த்துகிறது இப்பாடல். வெய்ய வினை - விரும்பத்தக்க நல்வினையும் கொடிய தீவினையும். இரண்டும் பொன் விலங்கும் இருப்பு விலங்கும் போலத் தளைத்து நிற்பவாகலின் நல்வினையும் தீரவேண்டுவதாயிற்று. செய்ய மலர் - சிவந்த மலர். வையம் உமதாம் - எலிமாவலியாகி வையமுழுதாண்டாற்போல உமதாம் என்பதாம். விளி முதற்பாட்டிலிருந்து கொள்ளப் பெறும்.

8. பொ-ரை: அரக்கர் தலைவனாகிய இராவணனின் ஆற்றலைக் கால்விரல் ஒன்றால் நெருக்கி அடர்த்து அழித்து ஆரூரில் எழுந்தருளிய இறைவனைக் கைகளால் தொழுவீர்களாக. உமது மனக்கோணல் நீங்கும், திருத்தம் பெறலாம்.

கு-ரை: செய்யமலர்தூவி வையந்தமதாய காலத்து உண்டாகிய தருக்கையும் களைந்து திருத்தம் நல்குவர் தியாகேசராதலின் அவர்தலத்தைக் கையினாற்றொழ வேண்டும் என்கின்றது இப்பாடல்.

அரக்கன் - சிவபூசையை விதிமுறையியற்றி ஆட்சியும் படையும் பெற்ற இராவணன். ஆண்மை - திருவருட்பதிவு இன்மையால் தன்முனைப்பால் எழுந்த வன்மை. நெருக்கினான் - அடர்த்தவன். திருத்தம் -தூய்மை. திருத்தமாகும் - கோணல் நீங்கும் என்றுமாம். அரக்கன் தருக்கழித்த இறைவனது ஆரூர் தொழத் திருத்தமாம் என்க.