பக்கம் எண் :

946திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


989. துள்ளு மிருவர்க்கும், வள்ள லாரூரை
உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே. 9

990. கடுக்கொள்சீவரை, அடக்கி னானாரூர்
எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே. 10

___________________________________________________

9. பொ-ரை: செருக்குற்றுத்துள்ளிய திருமால் பிரமரின் செருக்கு அடக்கி அருள் செய்த, ஆரூரில் எழுந்தருளிய வள்ளற் பெருமானை மனத்தால் நினைத்து வழிபட வல்லவர்களின் வினைகள் நீங்கும்.

கு-ரை: அருள்பெற்றுச் சிறிது திருந்திப் பதவிகளின் நிற்பாரும், பதவிமோகத்தான் மயங்குவாராயினும், அவர்கள் மிகைநோக்காதே, அதுதான் ஆன்மவியல்பு என்று திருவுளங்கொண்டு அருள்செய்யும் கருணையாளன் எழுந்தருளியுள்ள ஆரூரை நினைக்க வேண்டும் என்றும், நினைத்தால் ஆகாமிய சஞ்சித வினைகள் அழியும் என்றும் அறிவிக்கின்றது இப்பாடல். துள்ளும் இருவர் - அதிகாரம் பெற்ற சகலான்மாக்களாதலின் மலமுனைப்பால் தாம் பெரியர் எனத்துள்ளுகின்ற பிரம விஷ்ணுக்கள். வள்ளல் - அவர்களுடைய மிகுதி கண்டும் நகையாது வழங்குபவர். உள்ளுதல் - தியானித்தல். மேல் வினை விள்ளும் எனவும் கூட்டலாம்.

10. பொ-ரை: கடுக்காயைத் தின்று துவர் ஆடை போர்த்துத் திரியும் சமண புத்தர்களை அடக்கியவனாகிய ஆரூர் இறைவனே பரம் பொருள் எனச் சிறப்பித்து வாழ்த்துவார், வேட்கை என்னும் ஆசையை விடுப்பர்.

கு-ரை: அதிகாரமலத்தான் துள்ளுவாரையும் ஆட்கொள்ளும் இறைவன், ஏனைய விஷத்தன்மை பொருந்திய ஆன்மாக்களையும் அடக்கியாளுவர் என்ற கருணையின் மேன்மையைக் காட்டுகின்றது இச்செய்யுள்.

கடுக்கொள் சீவர் - கடுப்பொடியைக்கொள்ளும் சமணராகிய ஆன்மாக்கள். அடக்கினார் - அத்தன்மை கெடுமாறு அடக்கியவர். எடுத்து வாழ்த்துவார் - உள்ளத்துட்கிடந்த உணர்ச்சி வெள்ளம் உரையிறந்து வருதலின் கேட்டாரும் தம்போலுய்ய உரக்க வாழ்த்துபவர். வேட்கைவிடுப்பர் - உரையினைச் செவிகேட்க, கேட்டதனைச் சித்தம் தியானிக்க, அதனால் மனம் ஒடுங்குதலின் பற்றுள்ளத்தைவிடுவர் என்பதாம்.