பக்கம் எண் :

958திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1016. ஆல நீழலார், ஆல வாயிலார்
கால காலனார், பால தாமினே. 3

1017. அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே. 4

1018. ஆட லேற்றினான், கூட லாலவாய்
பாடி யேமனம், நாடி வாழ்மினே. 5

1019. அண்ண லாலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ண மின்பமே. 6

___________________________________________________

3. பொ-ரை: கல்லால மர நிழலில் வீற்றிருப்பவரும், காலனுக்குக் காலனாய் அவனை அழித்தருளிய பெருவீரரும் ஆகிய ஆலவாய் இறைவரை மனத்தால் அணுகியிருப்பீர்களாக.

கு-ரை: ஆலநீழலார் - வடவால விருட்சத்தின் நிழலில் இருப்பவர்.

4. பொ-ரை: ஆலவாய்க் கோயிலிலுள்ள எந்தையாகிய சிவபெருமானுடைய அழிவில்லாத புகழுக்கு இருப்பிடமான திருவடிகளை மனங்கொள்ளுங்கள்.

கு-ரை: அந்தமில்புகழ் - எல்லையற்ற புகழ். பந்தியார் - இடமாகக்கொண்டவர்; பாசங்களால் கட்டுண்ணாதவர் என்றுமாம்.

5. பொ-ரை: வெற்றியோடு கூடிய ஆனேற்றினானது நான்மாடக்கூடல் என்னும் ஆலவாயின் புகழைப் பாடி மனத்தால் அவ்விறைவனையே நாடி வாழ்வீர்களாக.

கு-ரை: ஆடல் ஏறு - வெற்றியோடு கூடிய இடபம். நாடி - விரும்பி.

6. பொ-ரை: தலைமையாளனும் ஆலவாய் என்னும் மதுரைப் பதியின் கோயிலைப் பொருந்தியிருப்பவனுமாகிய சோமசுந்தரப் பெருமானையே எண்ணித் தொழுதுவரின் இன்பம் பெறுவது திண்ணமாகும்.

கு-ரை: எண்ணி - தியானித்து. திண்ணம் - உறுதி.