1020. அம்பொ னாலவாய், நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே. 7
1021. அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்க முண்மையே. 8
1022. அருவ னாலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே. 9
1023. ஆர நாகமாம், சீர னாலவாய்த்
தேர மண்சொற்ற, வீர னென்பரே. 10
___________________________________________________
7. பொ-ரை: அழகிய பொன்மயமான ஆலவாய்த்
திருக்கோயிலில் விளங்கும் இறைவனுடைய திருவடிகளே
நமக்குச் சார்வாகும் என நம்பி வாழ்பவரின் துன்பம்
நீங்கும்.
கு-ரை: நம்பனார் கழல் நம்பி - இதுவே
எமக்கு இம்மையும் மறுமையும் இன்பமும் வீடும் என்று
உறுதி கொண்டு.
8. பொ-ரை: அரக்கனாகிய பெருவலிபடைத்த
இராவணனைக் கால் விரலால் நெரித்தருளிய ஆலவாய்
அரன் புகழை உரைக்கும் உள்ளத்தார்க்கு அவனது கருணை
உளதாகும்.
கு-ரை: நெருக்கன் - நெருக்கியவன்.
9. பொ-ரை: அருவனாய் விளங்கும்
இறைவன் திருவாலவாயில் திருமால் பிரமர் ஆகிய
இருவர் போற்றும் உருவனாய் மருவி ஓங்கி நிற்கின்றான்.
கு-ரை: அருவன் - அருவமானவன். இருவர் -
அயனும்மாலும்.
10. பொ-ரை: பாம்பாகிய ஆரத்தை அணிந்தவனாய்,
ஆலவாயில் பெரும் புகழாளனாய் விளங்கும் இறைவன்,
புத்தரையும் சமணரையும் அழித்த பெருவீரன் ஆவான்
என்று அடியவர்கள் அவனைப் புகழ்ந்து போற்றுவார்கள்.
கு-ரை: ஆரம் - மாலை. சீரன்
-புகழுடையவன். தேரர் - புத்தர். அமண் - அமணர்.
|