பக்கம் எண் :

 95. திருவிடைமருதூர்961


95. திருவிடைமருதூர்

பதிக வரலாறு:

32-ஆம் பதிகம் பார்க்க.

திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி

பதிக எண்:95

திருச்சிற்றம்பலம்

1025. தோடொர் காதினன், பாடு மறையினன்
காடு பேணிநின், றாடு மருதனே. 1

1026. கருதார் புரமெய்வர், எருதே யினிதூர்வர்
மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே. 2

1027. எண்ணு மடியார்கள், அண்ணன் மருதரைப்
பண்ணின்மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே. 3

___________________________________________________

1. பொ-ரை: திருவிடைமருதூர் இறைவன் தோட்டை, இடத் திருச்செவியில் அணிந்தவனாய் நான்கு வேதங்களைப் பாடுபவனாய், சுடுகாட்டை விரும்பி அதன்கண் நின்று ஆடுகின்றவனாவான்.

கு-ரை: பேணி - விரும்பி.

2. பொ-ரை: தம்மைக் கருதாதவராகிய அசுரர்களின் முப்புரங்களை எய்து அழித்தவரும், எருதை வாகனமாகக் கொண்டு இனிதாக ஊர்பவரும் ஆகிய இறைவர்க்குத் திருவிடை மருதூரே விரும்பி உறையும் இடமாகும். அவரைத் தொழுதால் புகழ் சேரும். வினைகள் தீர்தலை உடையனவாகும்.

கு-ரை: கருதார் - பகைவர். விருது ஆம் - பெருமை உளதாம். வினை தீர்ப்பு ஆம் - வினைகள் தீர்தலை உடையனவாம்.

3. பொ-ரை: மனத்தால் எண்ணி வழிபடும் அன்பர்கள் தலைமையாளராய் விளங்கும் மருதவாணரைப் பண்ணிசையோடு அவர்தம் புகழைப் போற்ற, விண்ணுலகமும் அவர்கள் வசமாகும்.