பக்கம் எண் :

962திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1028. விரியார் சடைமேனி, எரியார் மருதரைத்
தரியா தேத்துவார், பெரியா ருலகிலே. 4

1029. பந்த விடையேறும், எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர், புந்தி நல்லரே. 5

1030. கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே. 6

1031. பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை
நிறையால் நினைபவர், குறையா ரின்பமே. 7

____________________________________________________

கு-ரை: அண்ணல் - பெருமையிற் சிறந்தவர். பண்ணின் மொழி - தோத்திரங்கள்.

4. பொ-ரை: விரிந்த சடைமுடியை உடையவரும், எரிபோன்ற சிவந்த மேனியருமாகிய மருதவாணரைத் தாமதியாது துதிப்பவர் உலகில் பெரியவர் எனப் போற்றப்படுவர்.

கு-ரை: எரி - மழு. தரியாது - தாமதியாது.

5. பொ-ரை: கட்டுத்தறியில் கட்டத்தக்க விடையை ஊர்ந்து வரும் எந்தையாராகிய மருதவாணரை மனத்தால் தியானிப்பவர்கள் அறிவால் மேம்பட்டவராவர்.

கு-ரை: பந்தவிடை - கட்டோடு கூடிய இடபம்.

6. பொ-ரை: ஒரு காலில் கழலும், பிறிதொரு காலில் சிலம்பும் ஒலிக்கும் உமைபாகராகிய அழகிய மருதவாணரை விரும்பித் தொழுவதை நியமமாகக் கொண்டவர்க்கு வருத்துதற்கு உரிய வினைகள் துன்புறுத்தா; அகலும்.

கு-ரை: கழலும் சிலம்பும் ஆர்க்கும் - ஒருகால் கழலும், ஒருகால் சிலம்பும் ஒலிக்கும். உழலும் வினை - வருத்தும் வினைகள்.

7. பொ-ரை: பிறை பொருந்திய சடைமுடியினை உடைய தலைமையாளரான வேதங்களை அருளிய மருதவாணரை நிறைந்த மனத்தால் நினைப்பவர் இன்பம் குறையப் பெறார்.

கு-ரை: நிறையால் - நிறைவோடு.