96. திருஅன்னியூர்
பதிக வரலாறு:
வெங்குருவேந்தர் திருக்குறுக்கைப்
பதியை வணங்கி, அன்னியூரை அடைந்தார்கள். அங்கு
எழுந்தருளியுள்ள ஆபத்சகாயநாதர் அடியிணைபோற்றி
"மன்னியூரிறை" என்னும் இப்பதிகத்தை
அருளிச்செய்தார்.
திருவிருக்குக்குறள்
பண்: குறிஞ்சி
பதிக எண்:96
திருச்சிற்றம்பலம்
1036. மன்னி யூரிறை, சென்னி யார்பிறை
அன்னி யூரமர், மன்னு சோதியே. 1
1037. பழகுந் தொண்டர்வம், அழக னன்னியூர்க்
குழகன் சேவடி, தொழுது வாழ்மினே. 2
1038. நீதி பேணுவீர், ஆதி யன்னியூர்ச்
சோதி நாமமே, ஓதி யுய்ம்மினே. 3
___________________________________________________
1. பொ-ரை: திருஅன்னியூரில்
எழுந்தருளிய நிலைபெற்ற ஒளி வடிவினனாகிய சிவன்,
பிறை சூடிய திருமுடியோடு பல தலங்களிலும்
எழுந்தருளியிருந்து, ஆங்காங்குள்ள மக்கட்குத்
தலைவனாய் விளங்குபவன்.
கு-ரை: சென்னி -தலை. சோதிமன்னிஊர்
இறை என முடிக்க.
2. பொ-ரை: இறைவன்பால் மனம்
ஒன்றிப் பழகும் தொண்டர்களே வாருங்கள்.
அன்னியூரில் அழகனாகவும் இளமைத் தன்மை
உடையவனாகவும் எழுந்தருளியுள்ள சிவபிரானின்
செம்மையான திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக.
கு-ரை: வம் - வாருங்கள். குழகன் -
இளையவன்.
3. பொ-ரை: நீதியைப் போற்றி
அதன்படி வாழ்கின்றவர்களே.
|