பக்கம் எண் :

978திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1064. வேயுயர்சாரற் கருவிரலூகம்

விளையாடும்

சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய

செல்வனார்

பேயுயர்கொள்ளி கைவிளக்காகப்

பெருமானார்

தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற்

றாகாதே. 7

__________________________________________________

சிவந்த பொன் போன்ற நிறத்தனவாய் உதிரும் சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர். நஞ்சினை உண்பர். தலையோட்டில் பலி ஏற்பர். வேறுபட்ட இவர்தம் செயல்களின் உண்மையை யார் அறியவல்லார்.

கு-ரை: சிராப்பள்ளிமேவிய செல்வர் பெண்ணொரு பாகமாகுவர், ஆகாதநஞ்சை அருந்துவர், பிரமகபாலத்தில் பிச்சையும் எடுப்பர், இவர் செயல்கள் ஒன்றோடொன்று ஒத்திருந்தனவல்ல என்ற படி.

வெய்ய - கொடிய; விரும்பத்தக்க என்றுமாம். வேங்கைப்பூ பொன் சேரும் சிராப்பள்ளி என்றது, வேங்கை மலர்கள் பொன் போன்ற நிறத்தனவாய் நிலத்தைச்சேரும் மலை என்க. ஐயம் - பிச்சை.

7. பொ-ரை: கரிய விரல்களை உடைய கருங்குரங்குகள் விளையாடும் மூங்கில் மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள சாரலை உடைய சிராப்பள்ளியில் நெடிதாக உயர்ந்துள்ள கோயிலில் மேவிய செல்வராகிய பெருமானார் பேய்கள் உயர்த்திப் பிடித்த கொள்ளிகளைக் கைவிளக்காகக் கொண்டு. சுடுகாட்டில் எரியும் தீயில் மகிழ்ந்து நடனம் ஆடும் திருக்குறிப்பு யாதோ? அஃது அவரை அடைய விரும்பும் மகளிர்க்குப் புலனாகாததாக உள்ளதே.

கு-ரை: தாயுமானவர், பேயின் கையிலுள்ள கொள்ளியைக்கை விளக்காகக் கொண்டு ஆடுதல் திருவுளக் குறிப்பாயின் அது ஆகாது என்கின்றது. வேய் - மூங்கில், கருவிரலூகம் - கருங்குரங்கு. சேய் - தூரம். கைவிளக்கு - சிறியவிளக்கு.