பக்கம் எண் :

1019

101. திருவாரூர்

பதிக வரலாறு:

     திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்புகலூரிலிருந்து,
திருவாரூரைத் தரிசிக்க, அதன் அருகில் வரும்போது. ஒரு பேரொளிமயமாக
ஆரூர் தோன்றிற்று. அதுகண்டு பாடியது இத்திருப்பதிகம். திருவிராகம்

                  பண்: நட்டராகம்

ப.தொ.எண்: 237   பதிக எண்: 101

                  திருச்சிற்றம்பலம்

2561.







பருக்கையானை மத்தகத்
     தரிக்குலத் துகிர்ப்புக
நெருக்கிவாய நித்திலந்
     நிரக்குநீள் பொருப்பனூர்
கருக்கொள்சோலை சூழநீடு
     மாடமாளி கைக்கொடி
அருக்கன்மண்ட லத்தணாவு
     மந்தணாரு ரென்பதே.              1


     1. பொ-ரை: பருத்த கையை உடைய யானையோடு போரிடும்
சிங்கத்தின் கை நகங்கள் அதன் மத்தகத்தைக் கீறலால், மத்தகம்
முத்துக்களைச் சிந்தும் கயிலைமால்வரையைத் தனக்கு இடமாகக் கொண்ட
சிவபிரானது ஊர் பசுமையான சோலைகளால் சூழப்பெற்றுக் கதிரோன்
மண்டலத்தைக் கிட்டும் கொடிகள் கட்டப்பட்ட மாடமாளிகைகளை உடைய
திருவாரூர்.

     கு-ரை: மத்தகம்-தலை நெற்றி. அரி-சிங்கம், அருக்கன்-சூரியன்.
அணாவும்-கிட்டும்.

     ஆரூர்-‘ஆத்தி’ பற்றி வந்த காரணப் பெயர். அது சோழ மன்னரது
தார்.