2573.
|
கோல
மாகரி யுரித்தவ ராவொடு
மேனக்கொம் பிளவாமை
சாலப் பூண்டுதண் மதியது சூடிய
சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர்
பொருகடல் விடமுண்ட
நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந்
தொழவினை நில்லாவே. 2 |
2574.
|
மானத்
திண்புய வரிசிலைப் பார்த்தனைத்
தவங்கெட மதித்தன்று
கானத் தேதிரி வேடனா யமர்செயக்
கண்டருள் புரிந்தார்பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ்
சிரபுரத் துறையெங்கள்
கோனைக் கும்பிடு மடியரைக் கொடுவினை
குற்றங்கள் குறுகாவே. 3 |
2.
பொ-ரை: அழகிய பெரிய யானையை உரித்தவரும், பாம்பு,
பன்றிப்பல், இளஆமையோடு இவற்றைமிகுதியாகப் புனைந்து தண்மதி
சூடிய சங்கரனாரும், தம்மைப் போலத் தம் அடியார்க்கும் இன்பம்
அளிப்பவரும், பெரிய கடலிடைத் தோன்றிய விடத்தை உண்ட
நீலகண்டரும் ஆகிய சிரபுரத்து இறைவனைத் தொழ வினைகள்
நாசமாகும்.
கு-ரை:
சால-அமைய, சங்கரன்-சுகத்தைச் செய்பவன். நித்தியசுகம்,
பேரின்ப வடிவினனாகிய பரமசிவன் தன் அடி அடைந்தவர்க்குத் தனது
பேரின்பவடிவினை அருள்கின்றான். (முத்திநிச்சயப் பேருரை:- பக்கம்-74,
177 பார்க்க).
3.
பொ-ரை: பெருமைமிக்க தோள்வலிமையோடு வில்திறனில்
சிறந்திருந்த அருச்சுனனை அவன்தவம் கெடுமாறு செய்து அவனை
மதித்துக் கானகத்தில் ஒரு வேடனாய்ச் சென்று அவனை எதிர்த்து
அமர் செய்யும் அவன் ஆற்றலைக் கண்டு அருள்புரிந்தவரும், வண்டுகள்
பூந்தேனைத் தேர்ந்து திரியும் மலர்மனம் சூழ்ந்த சிரபுரத்துறை எங்கள்
தலைவரும் ஆகிய பெருமானாரைக் கும்பிடும் அடியவரைக்
கொடுவினைக்குற்றங்கள் குறுகா.
|