பக்கம் எண் :

1035

103. திருஅம்பர்மாகாளம்

பதிக வரலாறு:

     அம்பர்மாநகர் மாகாளத்தை வழிபட்ட திருஞானசம்பந்த மூர்த்தி
நாயனார் திருநாவுக்கரசுநாயனாருடன் வாழ்ந்திருந்த பொழுது பாடிய
திருப்பதிகங்களுள் ஒன்று இத்திருப்பதிகம்.

                     பண்: நட்டராகம்

ப.தொ.எண்: 239   பதிக எண்: 103

                     திருச்சிற்றம்பலம்

2583.







புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்
     போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும்
      பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை யரிசிலின் வடகரை
      வருபுனன் மாகாளம்
அல்லு நண்பக லுந்தொழு மடியவர்க்
      கருவினை யடையாவே.             1


     1, பொ-ரை: பொன்னிறம் பொருந்திய சடைமுடியில் இளம்
பிறையையும் தேன் பொருந்திய கொன்றைமலரையும் பிணைத்துச் சூடிய
பெருமான் எழுந்தருளிய அரிசிலாற்றின் வடகரையில் உள்ள அம்பர்
மாகாளத்தை இரவும் பகலும் தொழும் அடியவர்களை அருவினைகள்
அடையா.

     கு-ரை: அரிசிலாற்றின் வடகரையில் மாகாளத்தை இராப்பகல்
இடைவிடாமல் வழிபடும் அடியார்களுக்கு நீக்குதற்கு அரிய வினைகள்
நீங்கிப்போம்.

     அவை மீண்டும் அவரை அடைய வல்லன அல்ல. ‘அல்லும்
நண்பகலும் தொழும் அடியவர்’:- ‘கங்குலும் பகலும் தொழும் அடியவர்’
(பா.4.)