பக்கம் எண் :

1051

2608.







சேடு லாவிய கங்கையைச் சடையிடைத்
     தொங்கவைத் தழகாக
நாடு லாவிய பலிகொளு நாதனார்
     நலமிகு கீழ்வேளூர்ப்
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக்
     கோயிலுட் பிரியாது
நீடு லாவிய நிமலனைப் பணிபவர்
     நிலைமிகப் பெறுவாரே.           4
2609.







துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை
     வடமணி சிரமாலை
மன்று லாவிய மாதவ ரினிதியன்
     மணமிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின்
     நிமலனை நினைவோடும்
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை
     தேய்வது திணமாமே.            5


     4. பொ-ரை: பெருமைமிக்க கங்கையை முடியில் சூடி, மிக
அழகாக நாடு முழுதும் சென்று பலியேற்கும் நாதரும் நன்மைகள் நிறைந்த
கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் வலிமைமிக்க பெருமையோடு
திகழ்பவருமாகிய சிவபிரானை இடைவிடாது வழிபடுவோர் நிலையான
பேரின்ப வாழ்வு பெறுவர்.

     கு-ரை: சேடு-பெருமை. பீடு-வலிமை. நீடு-அழியாமை. கீழ்வேளூர்ப்
பெருமானார் பெருந்திருக்கோயிலை வழிபடுவோர் நிலைத்த பேரின்ப
வாழ்வு மிகப் பெறுவர்.

     5. பொ-ரை: நெருக்கமாக நீண்டு வளர்ந்த சடையில் திங்கள், பிரம
கபாலம், கயிறு, மணிகள், தலைமாலை முதலியவற்றை அணிந்து, மன்றத்தில்
மாதவத்தோர் உலாவும் சிறப்புமிக்க கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள்
விளங்கும் நிமலனை நினைவோடு சென்று ஏத்த வல்லவரின் வினைகள்
தேய்வது திண்ணம்.

     கு-ரை: நகுதலை-பிரமகபாலம். வடம்-கயிறு. சிரம்-