பக்கம் எண் :

1061

2623.

குயிலி னேர்மொழிக் கொடியிடை வெருவுறக்
     குலவரைப் பரப்பாய
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி
     தோளிரு பதுமூன்றி
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன்
     வலஞ்சுழி யெம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர்
     அல்லவர் காணாரே.           8
   

2624.

அழல தோம்பிய வலர்மிசை யண்ணலு
     மரவணைத் துயின்றானும்
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர்
     மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி
     வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு
     துன்பங்கள் களைவாரே.        9



     8. பொ-ரை: குயில் மொழியும் கொடியிடையும், மயிலின் சாயலும்
உடைய உமை வெருவக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனின்
இருபது தோள்களையும் ஊன்றி அடர்த்து அம்மையோடு உடனுறையும்
வலஞ்சுழி எம்மானைப் பாடிப் பழக வல்லவர் பரகதி பெறுவர். அல்லவர்
காணார்.

     கு-ரை: கொடியிடையும் மயிலை நேரொத்த சாயலும்
உமாதேவியாரைக் குறித்தன. வல்லவர் காண்பவர். அல்லவர்காணார்.

     9. பொ-ரை: நான்முகனும், திருமாலும் திருமுடியையும்,
திருவடிகளையும் காண இயலாதவாறு சோதிப்பிழம்பாய் நின்றவர்
சிவபெருமான். மழலைபோல இனிய இசைதரும் வீணையைக் கையில்
ஏந்தியவர். அவர் எழுந்தருளிய திருவலஞ்சுழியை அடைவார்
தொல்வினைகளும் துன்பங்களும் நீங்கப்பெறுவர்.

     கு-ரை: அழலது-தீ. ‘கற்றாங்கு எரியோம்பிக் கலியைவாராமே
செற்றார்’. அண்ணல்-பிரமன். அரவணை-பாம்பாகிய படுக்கை.
துயின்றான்-திருமால். ஆயவர்-சிவபிரான்.