பக்கம் எண் :

1071

108. திருவிற்குடி வீரட்டம்

பதிக வரலாறு:

     நாவரசரும் ஞானவேந்தரும் திருப்புகலூரில் வழிபட்ட காலத்தில்
பிள்ளையார் திருவிற்குடி வீரட்டஞ் சென்று மேவிப் பணிந்து பற்பல
ஆயிரம் தொண்டரோடும் போற்றிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

பண்: நட்டராகம்

ப.தொ.எண்: 244   பதிக எண்: 108

                      திருச்சிற்றம்பலம்

2638.







வடிகொள் மேனியர் வானமா மதியினர்
     நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்
      உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை
      விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை
      அருவினை யடையாவே.                1


     1. பொ-ரை: தெளிவான திருமேனியினரும், வானத்துப்பிறை
மதியைச் சூடியருவம், கங்கையை அணிந்தவரும் தேன் நிறைந்த
மணமுடைய கொன்றை மலரைச் சூடிய சடையினரும், கொடிபோன்ற
உமையம்மை மணாளரும் புலித்தோலை உடுத்தவரும் ஆகிய விடை
ஏறும் எம்பெருமான் இனிதாக அமர்ந்துறையும் விற்குடி வீரட்டத்தை
அடியவராய் நின்று ஏத்தவல்லார்களை அரியவினைகள் அடையா.

     கு-ரை: வடி-தெளிவு, மது-தேன். கொடி-உமாதேவியார் அருவினை
அடையாமைக்கு வேண்டுவது அடியாராகிநின்று ஏத்தும் வன்மை.