பக்கம் எண் :

1116

2713.







வாய்ந்தசெந்நெல் விளைகழனி
     மல்கும்வயற் காழியான்
ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர்
     உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள்
     பத்தும்மிசை வல்லவர்
வேந்தராகி யுலகாண்டு
     வீடுகதி பெறுவரே.         11

                     திருச்சிற்றம்பலம்

     11. பொ-ரை: வயல்வளம் உடைய காழிநகரில் தோன்றிய
ஞானசம்பந்தன், நீர் அருவிகளை உடையதும், இமையோர்கள்
உறைவதுமாகிய கேதாரத்து இறைவர்மீது ஆய்ந்து சொன்ன அருந்தமிழ்
பத்தையும் இசையோடு பாடி வழிபட வல்லவர். வேந்தராய் உலகை
ஆண்டு முடிவில் வீடுகதி பெறுவார்கள்.

     கு-ரை: ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரம்
என்றதில், கேதாரத்தை வழிபடும் இமையவர் அவ்வாறு திங்களும்
உறைகின்ற இடம் நீர்க்கோடு என்பது குறிக்கப்பட்டது. வீடுகதி-
வீட்டிற்குரிய நெறி. வீடும் (பாசநீக்கம்) கதியும் (சிவப்பேறு) என
உம்மைத் தொகையுமாம்.

     திருஞானசம்பந்தர் புராணம்

அங்கண்வடதிசைமேலும் குடக்கின் மேலும்
     அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்
திங்கள்புனை முடியார்தந் தானந் தோறும்
     சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல
மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப
     வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
     தொழுதுதிருப் பதிகஇசை திருத்தப் பாடி.

-சேக்கிழார்.