பக்கம் எண் :

1126

2728.







வண்டுபாட வளர்கொன்றை
     மாலைமதி யோடுடன்
கொண்டகோலங் குளிர்கங்கை
     தங்குங்குருள் குஞ்சியுள்
உண்டுபோலும் மெனவைத்து
     கந்தவொரு வற்கிடம்
கண்டல்வேலி கழிசூழ்
     கடல்நாகைக் காரோணமே.    4
2729.







வார்கொள்கோலம் முலைமங்கை
     நல்லார்மகிழ்ந் தேத்தவே
நீர்கொள்கோலச் சடைநெடு
     வெண்திங்கள் நிகழ்வெய்தவே
போர்கொள்சூலப் படைபுல்கு
     கையார்க் கிடமாவது
கார்கொளோதங் கழிசூழ்
     கடல்நாகைக் காரோணமே.    5


     4. பொ-ரை: வண்டுகள் பாடுமாறு மலர்ந்த கொன்றை மலர்
மாலையை இளம்பிறையோடு ஒருசேர அணிந்து, சுருண்ட சடையுள்
குளிர்ந்த கங்கையை ஐயப்படுமாறு மறைத்துவைத்து, மகிழ்ந்த
இறைவனுக்கு இடம், தாழைவேலி சூழ்ந்ததும் உப்பங்கழிகள் நிறைந்ததும்
ஆகிய கடல் நாகைக்காரோணமாகும்.

     கு.ரை: மாலைமதி:- ‘மாசில்வீணையும் மாலைமதியமும்’ கோலம் -
அழகு. சிவவேடம்.

     குருள்குஞ்சி-குருண்டசடை, குருண்டவார் குழற்சடையுடைக்குழகன்
(தி.2 ப.105 பா.11).

     5. பொ-ரை: நல்லவர் மகிழ்ந்தேத்த, கச்சணிந்த தனங்களை
உடைய உமையம்மையோடு கூடிய அழகோடு, தண்மையான அழகிய
சடையில் நீண்டநிலாக்கதிர்களைப் பரப்பும் இளம்பிறை விளங்கப்
போருடற்றும் சூலப்படையைக் கையின்கண் கொண்டுவிளங்கும்
சிவபிரானுக்குரிய இடம் ஓதம் பெருகும் கரிய கழிகள் சூழ்ந்த கடல்
நாகைக் காரோணமாகும்.