பக்கம் எண் :

1171

2795.







ஏவி லாருஞ் சிலைப்பார்த் தனுக்கின்
     றருள்செய்தவர்
நாவி னாண்மூக் கரிவித்த நம்பர்க்
     கிடமாவது
மாவி லாருங் கனிவார் கிடங்கில்
     விழவாளைபோய்ப்
பூவி லாரும் புனற்பொற்கை யில்வைகும்
     புகலியே.                       5

2796.







தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்
     தையலாளொடும்
ஒக்க வேயெம் முரவோ னுறையும்
     மிடமாவது
கொக்கு வாழை பலவின் கொழுந்தண்
     கனிகொன்றைகள்
புக்க வாசப் புன்னை பொன்றிரள் காட்டும்
     புகலியே.                       6


     5. பொ-ரை: கணை பொருந்திய வில்லில் வல்ல அருச்சுனனுக்கு
அருள் செய்தவரும், கலைமகளின் மூக்கை அரிவித்தவரும், ஆகிய
சிவபிரானுக்குரிய இடம், மாங்கனிகள் பெரிய மடுக்களில் வீழ்வதைக் கண்டு
வாளைமீன்கள் பூக்கள் நிறைந்த அப்பொய்கை மடுக்களைச் சென்றடையும்
புகலிப்பதியாகும்.

     கு-ரை: நாவினாள்-நாமகள், மூக்கு அரிவித்த நம்பர்-மூக்கினை
அரியச் செய்த சிவபிரானார், தக்கயாக சங்காரத்தில் வீரபத்திரர் அரிந்தார்.
சுருதியான் தலையும் நாமகள் மூக்கும். . . இறுத்து அவர்க்கு அருளும்
பரமனார்’ (தி.3 ப.118 பா.5). நம்பர்-உயிர்களின் விருப்பிற்குரியர்,
விருப்பாயிருப்பவர். மாவில் ஆரும் கனி-மாமரத்தில் நிறைந்த பழங்கள்.
வார் கிடங்கில்-நீண்ட அகழியில் விழ-விழலால். வாளை போய்ப்
பொய்கையில் வைகும் என்க.

     6. பொ-ரை: தக்கன் வேள்வியைத் தகர்த்தவனும், எம் உரவோனும்
ஆகிய சிவபிரான் தையலாளொடு உறையும் இடம், மா, வாழை, பலா
ஆகிய கனிகளின் மணத்துடன் கொன்றை, புன்னை இவற்றின் மகரந்தம்
பொன்திரள் போலத்தோன்றும் புகலியாகும்.