பக்கம் எண் :

338

 9. திருமழபாடி

பதிக வரலாறு:

     கைத்தாளம் பெற்ற கவுணியர் பெருமான் நெய்த்தானப் பதியினின்று,
திருமழபாடியைச் சேர்ந்து, “மங்கைவாழ் பாகத்தார் மழபாடி தலையினால்
வணங்குவார்கள் பொங்கு மாதவமுடையார்” எனத் தொழுது போற்றிசைத்துக்
கோயிலுட் புக்கு வலங்கொண்டு வழிபட்டு வயிரமணித்தூணைக் கும்பிட்டுப்
பாடியது இத்திருப்பதிகம்.

                       பண்: இந்தளம்

ப.தொ. எண்: 145   பதிக எண்: 9

                      திருச்சிற்றம்பலம்

1558.



களையும் வல்வினை யஞ்சனெஞ் சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்
டளையுங் கொன்றையந் தார்மழ பாடியு ளண்ணலே.  1



     1. பொ-ரை:உயர்ந்ததும் பெரியதுமான மேருமலையை நல்ல
உயர்ந்த வில்லாக வளைத்து அசுரர்களின் திரிபுரங்களை அவ்வசுரர்
வருந்துமாறு போர்செய்தவனாய், வண்டினங்கள் தேனை உண்ணத்
துழாவுகின்ற கொன்றை மலர்மாலை அணிந்த மழபாடியுள் விளங்கும்
அண்ணல், நம் வல்வினைகளைக் களைவான். நெஞ்சே! அஞ்ச வேண்டா.

     கு-ரை:நெஞ்சே, அஞ்சல்; வல்வினையை மழபாடி
அண்ணல்களைவான் என்க. விற்பூட்டுப் பொருள்கோள். கருதார் -பகைவர்
(திரிபுரத்து அசுரர்). உளையும் - வருந்தும் பூசல் - போர். வரை - மேரு
மலையாகிய வில். விலா - பக்கத்தெலும்பு. சரம் - பாணம். (திருமாலாகிய
கணை).

     மது - கள். தும்பி வண்டு-வண்டினங்கள். அளையும் - துழாவும். தார்-
மாலை. மழபாடி - மழுவாடி என்பதன் மரூஉ என்பர். அண்ணல்-பெருமான்.