பக்கம் எண் :

385

 16. திருமணஞ்சேரி

பதிக வரலாறு:

     வேதந்தமிழால் விரித்த வித்தகர், பந்தணைநல்லூரைப் பணிந்து,
திருமணஞ்சேரியில் தொண்டரொடும் சென்று தொழுது இசைபாடியபோது
‘அயிலாரும் அம்பு’ எனத் தொடங்கிப் பாடியருளியது இப்பதிகம்.

பண்: இந்தளம்

ப.தொ.எண்: 152 பதிக எண்: 16

திருச்சிற்றம்பலம்

1634.



அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.   1
1635.



விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேனிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.        2

     1. பொ-ரை: கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்து,
குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு
கூற்றில் உடையவனாகி, மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த
திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றார்க்குப் பாவம்
இல்லை.

     கு-ரை: அயில் - கூர்மை. அம்பு - திருமாலாகிய கணை. ‘குயில்
வாய்மொழியம்மை’ என்பது அம்பிகை திருநாமம் பயில்வான்
-கோயில்கொண்டு பயில்பவன். பற்றி நிற்றல் - பற்று விடுமாறு பற்றி
வழிபடல்.

     2. பொ-ரை:நீதி நெறிகளின் வடிவினன். தேவர்கள் வணங்கித்
தமது நிதியாகக் கொள்பவன். நீண்ட சடைமீது வானத்து மதியைச்
சூடியவன். வளமான பொழில்கள் சூழ்ந்த திருமணஞ்சேரியைத் தனது
பதியாகக் கொண்டவன். அவனைப் பாடவல்லார் வினைகள் அழியும்.