பக்கம் எண் :

395

1653.



போகம் அறியார் துவர்போர்த் துழல்வார்
ஆகம் அறியா அடியார் இறையூர்
மூகம் அறிவார் கலைமுத் தமிழ்நூல்
மீகம் அறிவார் வேணு புரமே.            10
1654.



கலமார் கடல்போல் வளமார் தருநற்
புலமார் தருவே ணுபுரத் திறையை
நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன
குலமார் தமிழ்கூ றுவர் கூர் மையரே.      11

                       திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: சிவபோகத்தின் சிறப்பை அறியாதவர்களும், துவராடை
போர்த்துத்திரிபவர்களும் ஆகிய சமண புத்தர்களின் உடலை ஏறெடுத்தும்
பாராத சிவனடியார்களுக்குத் தலைவனாகிய சிவபிரானது ஊர், மௌனத்தின்
சிறப்பை அறிந்தவர்களும், கலைகளையும் முத்தமிழ் நூல்களையும்
கற்றமேலான அறிவுடையவர்களும் வாழும் வேணுபுரம் ஆகும்.

     கு-ரை: போகம் - சிவானந்த போகத்தை. துவர் - பழுப்பு ஏறிய
ஆடைக்கு ஆகுபெயர். உழல்வார் - திரிவார் (சமணர்சாக்கியர்) ஆகம்
அறியா அடியார் - சிவநிந்தைசெய்யும் பிறமதத்தரை ஏறெடுத்தும் பார்க்காத
சிவனடியார். ஆகம் - உடம்பு. மூகம் - மௌம். மீகம் -வானோர்க்குயர்ந்த
உலகம். (கம் - வான். மீ - மேல்.) மூகம் அறிவாரும் கலை முத்தமிழ்
நூலால் மீகம் அறிவாரும் வாழ்கின்ற வேணுபுரம். அறிவார் - ஞானியர்.

     11. பொ-ரை: மரக்கலங்களையுடைய கடல் போல் பரவிய
வளங்களை உடையதும், நன்செய் நிலங்கள் நிறைந்ததும் ஆகிய
வேணுபுரத்து இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிச்
சொன்ன மேன்மைமிக்க இத்தமிழ் மாலையை அன்போடு பாராயணம்
புரிவோர் மதிநுட்பமும் திருவருட்பெருக்கமும் உடையவர் ஆவர்.

     கு-ரை: கலம் - மரக்கலம். ஆர்தல் - நிறைதல், பொருந்துதல்.
நற்புலம் - (நல் புலம்) நன்செய். நலம் - சிவம், சிவத்தைச் சார்வித்தற்குரிய
ஞானத்தின் தொடர்பு. குலம் - மேன்மை. தமிழ் - இத்திருப்பதிகத்தை.
கூறுவர் - அன்பொடு பாராயணம் செய்வோர். கூர்மையர் - திருவருட்
பெருக்கம் அடைபவர்.