பக்கம் எண் :

407

1671.



வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி
மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான்
குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும்
நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 6
1672.



பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான்
இறைதான் இறவாக் கயிலைம் மலையான்
மறைதான் புனலொண் மதிமல் குசென்னி
நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 7


     6. பொ-ரை: நெல்லிக்காவுள் நிலவும் இறைவன், மணம் கமழும்
கொன்றைமாலையை விரும்புபவன். மான்கள் விளையாடும் மலையினிடம்
தோன்றிய உமையம்மையை மணங்கொண்டு மகிழ்ந்தவன். குரு ஆனவர்
காட்டும் குறியைத் தியானித்து நாம் போய் அடையும் வீட்டுநெறியை
உடையவன்.

     கு-ரை: வெறி - மணம்.. தார் - மாலை. மறி - மான். மலைமங்கை
இமாசலகுமரி. குறியால் குறிகொண்டவர் போய்க்குறுகும் நெறியான் - குரு
உபதேசித்தகுறியினால் தியானித்துணர்ந்து கொண்டவர் சென்று அடையும்
ஒளி நெறியுடையவன்.

     ‘அறிவதொருகுறி குருவினருளினால் அறிந்து மன்னு சிவன்
றனையடைந்து நின்று’ அருள் ஞானக் குறியில் நின்று கும்பிட்டுத் தட்டம்
இட்டுக் கூத்தாடித்திரி (சித்தியார் 286, 323) ‘குறியொடுதாம் அழியும் நெறி’
(சித்தியார் 324) அதனின்மேலாயது.

     7. பொ-ரை: நெல்லிக்காவுள் நிலாவிய இறைவன், சடையின் கண்
இளம் பிறையை அணிந்து எம் தந்தையாக விளங்கும் பெருமான் சிறிதும்
அழிவற்ற கயிலை மலையில் உறைபவன். மறைந்துறையும் கங்கையோடு
ஒளி பொருந்திய மதி நிறைந்த சென்னியை உடைய பூரணன்.

     கு-ரை: சடைச்சேர்த்திய - சடைமேல் சேரச்செய்த. ஏழன்
தொகை, இறவாக்கயிலைமலை - என்றதால் அழிவில்லாத சிறப்புணர்க,
புனல் -கங்கை, முதலடியிற் பிறையும் சடையும், மூன்றாவதடியில் மதியும்,
சென்னியும் என ஓரிடமும் நோக்கின் இப் பதிகத்தைப் பற்றி ஒரு
சிந்தனை தோன்றும்.