பக்கம் எண் :

418

1692.



நடநண் ணியொர்நா கமசைத் தவனே
விடநண் ணியதூ மிடறா விகிர்தா
கடல்நண் ணுகழிப் பதிகா வலனே
உடல்நண் ணிவணங் குவனுன் னடியே   5


படையாக விளங்கும் தூய ஒளியோனே! உன்னையே வணங்கி நினைப்பவர்
பால் அன்பு செய்பவனே! கழிப்பாலையில் விளங்குபவனே!

     கு-ரை: அன்பர்க்கு எளியாய், அல்லாதார்க்கு அரியாய், ‘காண்டற்கு
அரிய கடவுள் கண்டாய். கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
(தி.6 ப.23 பா.1) ‘நிலம் . . . . . . .காயம்’ - மண் முதலிய ஐம்பெரும்
பூதங்கள். இறைவன் அட்டமூர்த்தியாய் விளங்குதல் பற்றி ‘நிலம் . . . . . .
வெளிமன்னிய தூ ஒளியாய்’ என்றருளினார். உனையே தொழுது
உன்னுமவர்க்கு அளியாய் - ‘ஆமாத்தூ ரம்மான்றன் சாம்பல் அகலத்தார்
சார்பல்லாற் சார்பிலமே’ - (தி.2 ப.44 பா.3) என்றருளியவாறு சிவனையே
தொழுது தியானிப்பவர்க்கு திருவருட்பேறு எய்தும் என்பது தாற்பரியம்.

     5. பொ-ரை: நடனத்தை விரும்பி ஒப்பற்ற பாம்பைக் கச்சாகக்
கட்டியவனே! விடம் பொருந்திய தூயமிடற்றினனே! வேறுபட்ட பல
வடிவங்களைக் கொண்டவனே! கடலை அடுத்துள்ள கழியில் விளங்கும்
தலத்தில் விளங்குபவனே! என்உடல் உறுப்புக்கள் நிலத்தில் பொருந்த
வணங்குவது உன் திருவடிகளையாகும்.

     கு-ரை: அசைத்தவன் - கட்டியவன். நண்ணி அசைத்தவன் என்க.
நடம் - திருக்கூத்து, விடம். . . மிடறா - திருநீலகண்டனே. விகிர்தன்
-விரூபாக்கன் முதலிய நிலைமையன். ‘விளையாடவல்ல விகிர்தத்துருக் கொள்
விமலன்’ (தி.2ப.83பா.10) கடல் நண்ணு கழிப்பதி - கடற்கரைக் கழியிலுள்ள
தலம்.

     உடல் நண்ணி வணங்குவன் - அஷ்டாங்க நமஸ்காரம் செய்வேன்.
உன் அடியே - ஏகாரம் பிரிநிலை. தோற்றிய திதியே என்புழி “ஏகாரம்
இயைபின்மை நீக்குதற்கும், பிறி தினியைபு நீக்குதற்கும் பொதுவாய் நின்ற
பிரிநிலை” என்ற சிவ ஞானபோதச் சிற்றுரைப் பகுதியைக்காண்க. உடன்
எனப்பிரித்தல் பொருந்தாது. நண்ணுதற்குச் செயப்படுபொருள் நிலமும்
திருவடியும்.