பக்கம் எண் :

419

1693.



பிறையார் சடையாய் பெரியாய் பெரிய
மறையார் தருவாய் மையினா யுலகிற்
கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
இறையார் கழலேத் தஇடர் கெடுமே.       6
1694.



முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்
கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்
எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்
கதிரும் வினையா யினஆ சறுமே.         7


     6. பொ-ரை: பிறையணிந்த சடையினனே! பெரியோனே!
பெருமை பொருந்திய வேதங்கள் கூறும் உண்மைப் பொருளாய்
உள்ளவனே! மண்ணுலகில் கருநிறம் பொருந்திய பொழில் சூழ்ந்த
கழிப் பாலையில் எழுந்தருளியவனே! எங்கும் தங்கும் உன் திருவடிகளை
ஏத்த இடர்கெடும்.

     கு-ரை: ஆர் - பொருந்திய. பெரியாய் - முழு முதல்வனே. பெருமை-
பரத்துவம். பெரிய மறை ஆர்தரு வாய்மையினாய் வேதத்திற் சொல்லப்பட்ட
உண்மைப் பொருளானவனே. மகர மெய் விரித்தல் விகாரம்.

     இறை ஆர் கழல் - (எங்கும்) தங்குதலுடைய திருவருளாகிய கழல்.
இறை - இறைமையும் ஆம்.

     7. பொ-ரை: முதிர்ந்த சடைமுடியின் மேல் விளங்கும்
வெண்மையான ஒளிக்கதிர்களை உடைய பிறையைச் சூடியவனே!
கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முன்னிலைப்பரவல் என்னும்
வகையில் எதிர்நின்று பரவி இரங்கி உன்னைத் துதிக்கும் அடியவர்க்கு
நடுக்கத்தைத்தரும் வினைகளாகிய குற்றங்கள் அகலும்.

     கு-ரை: கதிர் வெண்பிறை:- வெண்மை கதிர்க்கும் பிறைக்கும்
உரியது. எதிர்கொள்மொழி - முன்னிலை மொழியாகிய துதிகள். அதிரும்
நடுக்கத்தை விளைக்கும். ஆயின ஆசு - ஆனவையாகிய குற்றங்கள்,
பெயரெச்சமும் ஆம். “அரன்பணியில் நின்றிடவும் அகலுங்குற்றம்”
“ஆசுபடுமல மாயை அருங்கன்மம் அனைத்தும் அகலும்”. (சித்தியார்
பா.304 291.) 106