பக்கம் எண் :

44

நமது ஆளுடைய அரசும் ஆளுடைய பி்ள்ளையாரும் அருளிய
பாசுரங்களால் அறியலாகும். அவ்விரண்டும் முறையே,

கூவ லாமை குரைகட லாமையைக்
கூவ லோடொக்கு மோகட லென்பபோற்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.


                                -அப்பர்.

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்கவேண்டா சுடர் விட்டுளன் எங்கள்சோதி
மாதுக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
காதுக்கண்மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.


                                -ஞானசம்பந்தர்.

என்பனவாம்.

     இத்தகைய சிறப்புவாய்ந்த சைவசமய தத்துவங்கள், பதி பசு,
பாச இயல்புகள், சரியை முதல் நாற்பாதங்கள் முதலிய எண்ணிறந்த
இலக்கணங்களுக்கெல்லாம் இலக்கியமாய் நின்றன நம் தெய்வத்
தமிழ்மறைகளாகிய சைவத் திருமுறைகள்.

     உலகில் எந்தநாட்டிலும், எந்தமொழியிலும், முதலில் இலக்கியமே
தோன்றியது. அதன்பின் சில நூற்றாண்டுகட்குப் பின்னரே அவற்றின்
இலக்கணங்கள் தோன்றலாயின என்பது யாவரும் ஒப்ப முடிந்த ஒன்று.
‘இலக்கியங் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பல்’ என நன்னூலாரும்
இக்கருத்தை உணர்த்தியது உணர்க.

     ஆதலின் நமது தெய்வத்திருமுறைகள் தோன்றிச் சில
நூற்றாண்டுகட்குப் பின்னரே தமிழ்ச் சித்தாந்த சாத்திரங்கள் தோன்றுவன
ஆயின. ஆகவே சித்தாந்த நூல்களின் கருவூலம் திருமுறைகளே என்பதும்,
அவற்றில் ஆங்காங்குக் காணப்படும் உண்மைக் கருத்துக்களைத்
தொகுத்தும், வகுத்தும், விரித்தும், விளக்கியும் வெளிப்படுத்தினர் நமது
சித்தாந்த நூலாசிரியர் என்பதும் பெறலாயின.

     உதாரணமாக:- ‘எல்லா உலகமும் ஆனாய் நீயே’ என்பது நம்
அப்பர் தேவாரம். இதனை, சித்தியாரில், பதியாகிய சிவபெருமான்