பக்கம் எண் :

446

 26. திருநெல்வாயில்

பதிக வரலாறு:

     ஞானப்பாலுண்ட பெருமான் மன்றாடும் ஐயன் திருக்கூத்துக்
கும்பிட்டு, திருக்கழிப்பாலையைப் பணிந்துபாடி, கொன்றைச்
செம்மாலைவேணித் திருவுச்சி மேவியுறை அம்மானைப்பாடிய அருந்தமிழ்ப்
பதிகம் இது.

பண்: இந்தளம்

ப. தொ. எண்: 162                             பதிக எண்: 26

திருச்சிற்றம்பலம்

1742.



புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய
மடையி னார்மணி நீர்நெல் வாயிலார்
நடையி னால்விரற் கோவ ணந்நயந்
துடையி னாரெம துச்சி யாரே.      1
1743.

வாங்கி னார்மதிண் மேற்க ணைவெள்ளந்
தாங்கி னார்தலை யாய தன்மையர்


     1. பொ-ரை: வயற்பக்கங்களில் நண்டுகளை உடையதும்,
வாய்க்கால்களை அடுத்துள்ள நீர்மடையில் நீலமணி போன்று தெளிந்த நீரை
உடையதுமான நெல்வாயில் இறைவர் ஒழுக்கத்திற்குக்காட்டாக நால்விரல்
அளவுள்ள கோவண ஆடையை உடையவர். அவர் எம் முடிமேல் திகழும்
மாண்பினர்.

     கு-ரை: புடையின் - வயற்பக்கத்தில். ஆர் - பொருந்திய புள்ளி -
நண்டு. கால் - வாய்க்கால். மடையின் - நீர் மடையில். ஊர்ப்பெயர்க்
கேற்ப வளம் கூறப்பட்டிருக்கின்றது. நடை - ஒழுக்கம். நால்விரற் கோவணம்
ஐவிரற்கோவணம் ‘உடைதனில் நால்விரற்கோவணவாடை’ (தி.1ப.39பா.2)
‘ஐவிரற் கோவணவாடை பாறருமேனியர்’ (தி.1ப.44 பா.6) இரண்டும் இவர்
திருமுறையுட் கூறப்பட்டன. நயந்து - விரும்பி. உடையினார் - உடை
உடுத்தவர். உச்சியார் என்பது இத்தலத்து இறைவர் திருப்பெயர், நெல்
வாயிலார், உடையினார் என்பன இறைவரைக் குறிப்பன.

     2. பொ-ரை: முப்புரங்கள் மீது கணை தொடுக்க வில்லினை,
வளைத்தவர். பெருகிவந்த கங்கைநீரைச் சடைமிசைத் தாங்கியவர்.